தமிழ்நாடு

சோழவரம் அருகே ஓட, ஓட விரட்டி ரவுடி படுகொலை

Published On 2022-06-27 07:21 GMT   |   Update On 2022-06-27 07:21 GMT
  • இன்று அதிகாலை 2 மணிஅளவில் மதிவாணன் தனது கூட்டாளிகளான அதே பகுதியை சேர்ந்த ஹேம்நாத், சரத்குமார், தனுஷ் ஆகியோருடன் இருந்தார்.
  • கடந்த ஆண்டு அதே பகுதியை சேர்ந்த கஞ்சா மணி என்பவர் கொலை செய்யப்பட்டார்.

செங்குன்றம் அடுத்த காந்தி நகர், பாரதியார் தெருவை சேர்ந்தவர் கண்ணன். இவரது மகன் மதி என்கிற மதிவாணன் (வயது26). ரவுடி. இவர் மீது மீஞ்சூர், சோழவரம், செங்குன்றம் போலீஸ் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் உள்ளன.

இந்த நிலையில் இன்று அதிகாலை 2 மணிஅளவில் மதிவாணன் தனது கூட்டாளிகளான அதே பகுதியை சேர்ந்த ஹேம்நாத், சரத்குமார், தனுஷ் ஆகியோருடன் இருந்தார்.

அப்போது ஆட்டோவில் வந்த 4 பேர் கும்பல் திடீரென அரிவாள், கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் அவர்களை சுற்றி வளைத்தனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த மதிவாணன் உள்ளிட்ட 4 பேரும் அங்கிருந்து தப்பி செல்ல முயன்றனர்.

ஆனால் கொலை கும்பல் அவர்களை ஓட, ஓட விரட்டி வெட்டினர். மதிவாணனை குறி வைத்து சரமாரியாக வெட்டி சாய்த்தனர். இதில் தலை, கழுத்தில் பலத்த காயம் அடைந்த மதிவாணன் சம்பவ இடத்தி லேயே துடி,துடித்து இறந்தார்.

அவரது கூட்டாளிகளான ஹேம்நாத், சரத்குமார், தனுஷ் ஆகிய 3 பேரும் தலை, கழுத்தில் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடினர். பின்னர் கொலை கும்பல் ஆட்டோவில் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.

இதற்கிடையே அதே பகுதியில் உள்ள பாலம் அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்ட போது ஆட்டோவில் கத்தி, அரிவாளுடன் வந்த 2 வாலிபர்களிடம் விசாரணை நடத்தினர். அவர்கள் ரவுடி மதிவாணனை கொலை செய்து விட்டு தப்பி வந்தது தெரிந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் அவர்கள் 2 பேரையும் கைது செய்து சோழவரம் போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர்கள் சூர்யா, ராம்கி என்பதும் கூட்டாளிகளான பிரபாகரன் மற்றும் சீனு ஆகியோருடன் சேர்ந்து மதிவாணனை தீர்த்து கட்டியதும் தெரிய வந்தது. போலீசார் விரைந்து சென்று கொலையுண்ட மதிவாணனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். காயம் அடைந்த ஹேம்நாத், சரத்குமார், தனுஷ் ஆகிய 3 பேரும் சிகிச்கைக்காக ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கடந்த ஆண்டு அதே பகுதியை சேர்ந்த கஞ்சா மணி என்பவர் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் ரவுடி மதிவாணன் முக்கிய குற்றவாளியாக இருந்தார். இந்த கொலைக்கு பழிக்குப்பழியாக மதிவாணன் கொலை செய்யப்பட்டு இருப்பது போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த கொலை தொடர்பாக தப்பி ஓடிய பிரபாகரன், சீனு ஆகியோரை போலீசார் தேடி வருகிறார்கள். கொலையுண்ட மதிவாணன் நேற்று இரவு பிரபாகரன் கூடவே இருந்ததாக தெரிகிறது. இதன் பின்னரே இந்த கொலை நடந்து உள்ளது.

கைதானவர்களிடம் இருந்து ஆட்டோ, கத்திகள் பறிமுதல் செய்யப்பட்டது. இச்சம்பவம் சோழவரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News