தமிழ்நாடு

மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு 13 ஆயிரத்து 900 கன அடியாக குறைப்பு

Published On 2022-10-07 04:13 GMT   |   Update On 2022-10-07 04:13 GMT
  • ஒகேனக்கல் காவிரியில் வரும் தண்ணீர் அப்படியே மேட்டூர் அணைக்கு வருகிறது.
  • காவிரி டெல்டா மாவட்டங்களில் மழை பெய்வதால் அந்த பகுதிகளில் விவசாய தேவைக்கு நிலங்களுக்கு தண்ணீர் தேவை குறைந்துள்ளது.

மேட்டூர்:

கர்நாடகா மற்றும் தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் விட்டு விட்டு மழை பெய்வதால் ஒகேனக்கலுக்கு நீர்வரத்து அதிகரிப்பதும், குறைவதுமாக உள்ளது.

ஒகேனக்கலில் நேற்று முன்தினம் 20 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று மாலை 17 ஆயிரம் கன அடியாக சரிந்தது. ஆனாலும் மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் உள்பட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

ஒகேனக்கல் அருவிகளில் குளிக்க தடை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், பரிசல் இயக்க அனுமதி அளிக்கப்பட்டதால் சுற்றுலா பயணிகள் குடும்பத்தினருடன் அமர்ந்து உற்சாகமா க படகு சவாரி சென்று அருவியின் அழகை பார்த்து ரசித்து வருகிறார்கள்.

ஒகேனக்கல் காவிரியில் வரும் தண்ணீர் அப்படியே மேட்டூர் அணைக்கு வருகிறது. மேட்டூர் அணைக்கு நேற்று காலை விநாடிக்கு 17 ஆயிரத்து 778 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று மீண்டும் சரிந்து விநாடிக்கு 14 ஆயிரத்து 556 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது.

மேட்டூர் அணையில் இருந்து காவிரியில் டெல்டா பாசனத்திற்கு 15 ஆயிரம் கன அடி தண்ணீரும், கால்வாயில் 900 கன அடி தண்ணீரும் என மொத்தம் 15 ஆயிரத்து 900 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டு வந்தது.

இதற்கிடையே காவிரி டெல்டா மாவட்டங்களில் மழை பெய்வதால் அந்த பகுதிகளில் விவசாய தேவைக்கு நிலங்களுக்கு தண்ணீர் தேவை குறைந்துள்ளது. இதையடுத்து மேட்டூர் அணையில் இருந்து காவிரியில் தண்ணீர் திறப்பு நேற்று மாலை முதல் 13 ஆயிரம் கன அடியாக குறைக்கப்பட்டது. அதன் படி காவிரியில் 13 ஆயிரம் கன அடி தண்ணீரும், கால்வாயில் 900 கன அடி தண்ணீரும் என மொத்தம் 13 ஆயிரத்து 900 கன அடி தண்ணீர் மேட்டூர் அணையில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளது.

அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து குறைந்த அளவே தண்ணீர் இன்று காலை திறந்து விடப்படுகிறது. ஆனாலும் அணையின் நீர்மட்டம் நேற்றை விட குறைந்துள்ளது. நேற்று 118.80 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று மேலும் சரிந்து 118.79 அடியானது. இனி வரும் நாட்களில் நீர்வரத்து மேலும் அதிகரித்தால் மேட்டூர் அணை நீர்மட்டம் உயர வாய்ப்புள்ளது.

Tags:    

Similar News