கோவை ஆர்.எஸ்.புரம் ஆவின் நிலையத்தில் அதிகாரிகள் திடீர் ஆய்வு
- வினியோகிக்கப்பட்ட ஆவின் பால் பாக்கெட்டுகள் அதிகளவில் கசிவு ஆன நிலையில் காணப்பட்டது.
- தமிழ்நாடு பால் முகவர்கள், தொழிலாளர்கள் நலச்சங்கத்தினர் ஆவின் நிர்வாகத்தில் புகார் அளித்தனர்.
கோவை:
கோவை மாவட்டத்தில் உள்ள மேட்டுப்பாளையம், சிறுமுகை, ஆர்.எஸ்.புரம், சுந்தரேசன் லேஅவுட் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த 28-ந் தேதி காலை வழக்கம் போல் பால் முகவர்களுக்கு பால் விநியோகம் செய்யப்பட்டது.
அப்போது வினியோகிக்கப்பட்ட ஆவின் பால் பாக்கெட்டுகள் அதிகளவில் கசிவு ஆன நிலையில் காணப்பட்டது.
மேலும் உடைந்த, பயன்பாட்டிற்கு தகுதியற்ற பால் டப்புகளிலும் பால் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. இது முகவர்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது. இதன் காரணமாக பால் முகவர்களுக்கு பொருளாதார பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து தமிழ்நாடு பால் முகவர்கள், தொழிலாளர்கள் நலச்சங்கத்தினர் ஆவின் நிர்வாகத்தில் புகார் அளித்தனர்.
இந்தநிலையில் இன்று காலை ஆவின் கண்காணிப்பு அதிகாரிகள் கோவை ஆர்.எஸ்.புரம் ஆவின் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டனர். இதனை தொடர்ந்து மேட்டுப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளிலும் ஆய்வு மேற்கொண்டனர்.