தமிழ்நாடு

ஷாரிக் குறித்து மங்களூரூ போலீசார் நாகர்கோவிலில் இன்று மீண்டும் விசாரணை

Published On 2022-11-26 09:01 GMT   |   Update On 2022-11-26 09:01 GMT
  • கோவை, மதுரை, நாகர்கோவில் என பல்வேறு பகுதிகளுக்கும் ஷாரிக் சென்று சிலரை சந்தித்திருப்பதும் அந்த ஊர்களில் பெண்கள் பெயரில் அறை எடுத்து தங்கி உள்ளதும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.
  • மங்களூரூ போலீசார் இன்று மீண்டும் நாகர்கோவில் வந்தனர். அவர்கள் குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத்துடன் ஆலோசனை நடத்தினர்.

நாகர்கோவில்:

கர்நாடக மாநிலம் மங்களூரூ மாவட்டம் நாகுரி பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆட்டோவில் குண்டு வெடித்தது. இதில் ஆட்டோ டிரைவர் மற்றும் பின் இருக்கையில் இருந்த ஒருவர் படுகாயம் அடைந்தனர்.

இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தியதில் ஆட்டோவில் வெடித்தது குக்கர் குண்டு என தெரிய வந்தது. ஆட்டோவில் படுகாயத்துடன் கிடந்தவன் தான் வெடிகுண்டை கொண்டு சென்றவன் என்பதும் போலீஸ் விசாரணையில் கண்டு பிடிக்கப்பட்டது.

பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்புடைய அவனது பெயர் ஷாரிக் என்ற முகமது ஷாரிக் என போலீசார் கண்டு பிடித்தனர். அவன் மங்களூரூ ரெயில் நிலையத்தை தகர்க்கும் முயற்சியில் இறங்கியதும், எதிர்பாராதவிதமாக முன் கூட்டியே குண்டு வெடித்திருப்பதும் விசாரணையில் தெரிய வந்தது.

இதனை தொடர்ந்து என்.ஐ.ஏ. மற்றும் உளவுப்பிரிவு போலீசாரும் விசாரணையில் இறங்கினர். ஷாரிக்கின் செல்போனை கைப்பற்றி போலீசார் ஆய்வு செய்தபோது பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன. அவன் தனது செல்போனில் சிவன் படத்தை ஸ்டேட்டஸ் வைத்துக்கொண்டு பிரேம்ராஜ் என்ற பெயரில் சுற்றியுள்ளான்.

கோவை, மதுரை, நாகர்கோவில் என பல்வேறு பகுதிகளுக்கும் ஷாரிக் சென்று சிலரை சந்தித்திருப்பதும் அந்த ஊர்களில் பெண்கள் பெயரில் அறை எடுத்து தங்கி உள்ளதும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. மேலும் ஷாரிக் தொடர்புகொண்ட செல்போன் எண்களை போலீசார் ஆய்வு செய்தபோது, நாகர்கோவிலைச் சேர்ந்த பெண் மற்றும் வாலிபர் ஒருவருடன் பேசியிருப்பது தெரிய வந்தது.

இதனைத் தொடர்ந்து மங்களூரூ போலீசார் நாகர்கோவில் வந்தனர். அவர்கள் உள்ளூர் போலீசாருடன் குறிப்பிட்ட செல்போன் எண் வைத்திருந்த பெண்ணை பிடித்து விசாரித்தனர். துரித உணவகம் நடத்தி வரும் அந்தப்பெண், தனது செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்ததாகவும், அதில் பேசியவன் மொழி தனக்கு புரியாததால், தங்கள் நிறுவனத்தில் வேலைபார்த்த வாலிபரிடம் கொடுத்து பேசச் சொன்னதாகவும் கூறினார்.

அதன்பேரில் அந்தப் பெண் குறிப்பிட்ட கடை ஊழியரான அசாம் மாநிலத்தைச் சேர்ந்த அஜிம் ரகுமான் என்பவரை பிடித்து போலீசார் விசாரித்தனர். அவரும் பெண் கூறிய தகவலையே கூறினார். எனவே பெண்ணுக்கு வந்தது தவறான அழைப்பு என தெரிய வந்தது. இதனை தொடர்ந்து 30 மணி நேர விசரணைக்குப் பிறகு, அஜிம் ரகுமான் விடுவிக்கப்பட்டார்.

இந்த நிலையில் மங்களூரூ போலீசார் இன்று மீண்டும் நாகர்கோவில் வந்தனர். அவர்கள் குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத்துடன் ஆலோசனை நடத்தினர். ஷாரிக் நாகர்கோவில் வந்தது ஏன்? இங்கு ஏதும் சதி செயலில் ஈடுபட திட்டமிட்டானா? செப்டம்பர் மாதம் நாகர்கோவில் வந்தபோது எங்கு தங்கினான் என்பது குறித்து விசாரணையில் ஈடுபட்டனர். குமரி மாவட்டத்தில் உள்ள விடுதிகள் அனைத்திலும் அவர்கள் சோதனை நடத்தி விசாரணை செய்தனர்.

Tags:    

Similar News