தமிழ்நாடு

14 கிலோ நகையுடன் தப்பிய முக்கிய கொள்ளையன் சூர்யா கைது

Published On 2022-08-16 05:41 GMT   |   Update On 2022-08-16 05:41 GMT
  • முருகனுடன் சேர்ந்து அவரது நெருங்கிய நண்பரான சூர்யா என்பவரும் திட்டம் தீட்டி இருப்பது தெரியவந்துள்ளது.
  • நகைகள் அனைத்தையும் கோவை ஆர்.எஸ்.புரத்தில் உள்ள நகைக்கடை உரிமையாளர் ஸ்ரீவத்சவ் என்பவரிடம் விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளனர்.

சென்னை:

சென்னை அரும்பாக்கத்தில் உள்ள பெடரல் வங்கி கிளையில் பொதுமக்கள் அடகு வைத்திருந்த 32 கிலோ நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இது தொடர்பாக கொள்ளை கும்பல் தலைவன் முருகன், அவரது கூட்டாளிகள் சந்தோஷ், பாலாஜி, செந்தில்குமார் ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் இருந்து 18 கிலோ நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

இந்த நகைகளை எல்லாம் அரும்பாக்கம் போலீஸ் நிலையத்தில் கண்காட்சி போல நேற்று வைக்கப்பட்டி ருந்தன. கொள்ளை சம்பவம் நடைபெற்றது தொடர்பாக போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் விரிவாக விளக்கம் அளித்தார்.

இந்த கொள்ளை சம்பவத்தில் முதலில் 3 பேர் மட்டுமே ஈடுபட்டிருப்பதாக தகவல்கள் வெளியானது. பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில் 7 பேர் வரை கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டிருப்பது வெளிச்சத்துக்கு வந்தது.

இதைத்தொடர்ந்து கொள்ளை கும்பலை கூண்டோடு பிடிக்க திட்டமிட்டு போலீசார் தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தினர். போலீசாரின் இந்த அதிரடி வேட்டையால்தான் கொள்ளை கும்பலை சேர்ந்தவர்கள் வேறு எங்கும் தப்பி ஓடுவதற்கு முன்னர் சிக்கினர்.

பெடரல் வங்கி கொள்ளை சம்பவத்தில் அந்த வங்கியின் வில்லிவாக்கம் கிளையில் மேலாளராக பணியாற்றி வந்த முருகன் மட்டுமே மூளையாக செயல்பட்டதாக முதலில் தகவல் வெளியானது.

இந்த நிலையில், முருகனுடன் சேர்ந்து அவரது நெருங்கிய நண்பரான சூர்யா என்பவரும் திட்டம் தீட்டி இருப்பது தெரியவந்துள்ளது.

கொள்ளை சம்பவத்துக்கு இவரும் முருகனுடன் சேர்ந்து பல்வேறு திட்டங்களை தீட்டி செயல்படுத்தி இருப்பதும் அம்பலமாகி இருக்கிறது. இந்த வழக்கில் முதலில் பிடிபட்ட சந்தோஷ், பாலாஜி, செந்தில்குமார் ஆகியோரிடமிருந்து பெரும் பகுதி நகைகள் மீட்கப்பட்டு உள்ளன. இதுவரை 18 கிலோ நகைகளை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

மொத்தம் உள்ள 32 கிலோ நகைகளில் 18 கிலோ போக, மீதம் உள்ள 14 கிலோ நகைகளை கொள்ளையர்கள் எங்கு பதுக்கி வைத்துள்ளனர் என்பது தெரியாமல் இருந்தது. இந்த நிலையில் நகைகளை கொள்ளையடித்ததும், முருகன் 14 கிலோ நகைகளை தன் பங்குக்கு பிரித்து எடுத்துக்கொண்டு தப்பியதும் தெரியவந்தது.

இந்த நகைகள் அனைத்தையும் முருகன், தனது நெருங்கிய கூட்டாளியாக விளங்கிய சூர்யாவிடம் கொடுத்து பத்திரமாக வைத்துக்கொள்ள கூறியதும் விசாரணையில் தெரிய வந்தது.

இதன்படி இந்த 14 கிலோ நகையுடன் தப்பிய சூர்யாவை இன்று போலீசார் கைது செய்தனர்.

சூர்யா இந்த நகைகள் அனைத்தையும் கோவை ஆர்.எஸ்.புரத்தில் உள்ள நகைக்கடை உரிமையாளர் ஸ்ரீவத்சவ் என்பவரிடம் விற்பனை செய்ய திட்டமிட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

இதைத் தொடர்ந்து அவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதற்காக தனிப்படை போலீசார் கோவையில் முகாமிட்டு விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர். 14 கிலோ நகைகளையும் மீட்பதற்கான நடவடிக்கைகளில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர்.

இந்த வழக்கில் மேலும் 2 பேர் தலைமறைவாக உள்ளனர். அவர்களை பிடிக்கவும் தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. சூர்யாவுடன் சேர்ந்து வங்கி கொள்ளையில் இதுவரை 5 பேர் கைது செய்யப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News