தமிழ்நாடு

நாமக்கல்லில் தி.மு.க. உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநாடு- முதலமைச்சர் தொடங்கி வைத்தார்

Published On 2022-07-03 05:27 GMT   |   Update On 2022-07-03 05:27 GMT
  • நகர்ப்புற உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநாடு இன்று காலையில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுடன் கோலாகலமாக தொடங்கியது.
  • நாமக்கல் கிழக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் ராஜேஷ்குமார் எம்.பி. வரவேற்று பேசினார்.

நாமக்கல்:

நாமக்கல் மாவட்டம் புதன்சந்தை அருகே உள்ள பொம்மைகுட்டைமேட்டில் தி.மு.க. சார்பில் "உள்ளாட்சியில் நல்லாட்சி" என்ற தலைப்பில் நகர்ப்புற உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநாடு இன்று காலையில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுடன் கோலாகலமாக தொடங்கியது.

இந்த மாநாட்டை தமிழக முதல்-அமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.

மாநாட்டில் தமிழகம் முழுவதிலும் இருந்து நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற மாநகராட்சி மேயர்கள், துணை மேயர்கள், நகர்மன்ற தலைவர்கள், துணை தலைவர்கள், பேரூராட்சி தலைவர்கள், துணை தலைவர்கள் மற்றும் கவுன்சிலர்கள், வார்டு உறுப்பினர்கள் என சுமார் 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

மாநாட்டில் நாமக்கல் கிழக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் ராஜேஷ்குமார் எம்.பி. வரவேற்று பேசினார். தி.மு.க. பொதுச்செயலாளரும், அமைச்சருமான துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு எம்.பி., தி.மு.க முதன்மை செயலாளரும், அமைச்சருமான கே.என்.நேரு ஆகியோர் முன்னிலை வகித்து பேசினர்.

மத்தியில் கூட்டாட்சி-மாநிலத்தில் சுயாட்சி என்ற தலைப்பில் ஆ.ராசா எம்.பி. மற்றும் தி.மு.க. உருவாக்கிய நவீன தமிழ்நாடு என்ற தலைப்பில் திருச்சி சிவா எம்.பி., திராவிட மாடல் அரசின் ஓராண்டு காலம் என்ற தலைப்பில் அமைச்சர் தங்கம் தென்னரசு, இதுதான் திராவிட இயக்கம் என்ற தலைப்பில் சுப.வீரபாண்டியன், பெண்களின் கையில் அதிகாரம் என்ற தலைப்பில் பர்வீன்சுல்தானா ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள்.

முன்னதாக இன்று காலையில் நாமக்கல் கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள பொதுப்பணித்துறை மாளிகையில் இருந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மாநாட்டில் பங்கேற்பதற்காக காரில் புறப்பட்டார். நாமக்கல் கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பிலும், மேற்கு மாவட்ட தி.மு.க. சார்பிலும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் பல்லாயிரக்கணக்கானோர் வழிநெடுகிலும் உற்சாக வரவேற்பு அளித்தனர். அவர்களின் உற்சாக வரவேற்பை ஏற்றுக்கொண்டு முதல்-அமைச்சர் மாநாடு மேடைக்கு வந்தார்.

முதல்-அமைச்சர் வருகையையொட்டி நாமக்கல் நகரில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு உள்ளது. மேற்கு மண்டல போலீஸ் ஐ.ஜி. சுதாகர் தலைமையில் 13 மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் மேற்பார்வையில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

Tags:    

Similar News