சென்னை-ஸ்ரீபெரும்புதூர் வரை கே.எஸ்.அழகிரி தலைமையில் காங்கிரசார் நடைபயணம்
- சென்னை சத்தியமூர்த்தி பவனில் இருந்து நடைபயணத்தை கே.எஸ்.அழகிரி தொடங்கி வைத்தார்.
- நடைபயண ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கான காங்கிரஸ் தொண்டர்கள் காங்கிரஸ் கொடிகளை ஏந்தி சென்றனர்.
சென்னை:
காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி நாடு முழுவதும் 3,570 கி.மீ தொலைவுக்கு மேற்கொண்டு வரும் இந்திய ஒற்றுமை பயணம் கடந்த 7-ந் தேதி கன்னியாகுமரியில் தொடங்கியது.
இந்த நிலையில் இந்திய அரசமைப்பு சட்டத்தை பாதுகாக்கும் வகையில் தமிழக காங்கிரஸ் கட்சி சார்பில் இன்று (25-ந்தேதி) நடைபயணம் சென்னை - ஸ்ரீபெரும்புதூர் வரை நடத்தப்படும் என காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி அறிவித்து இருந்தார்.
அதன்படி சென்னை சத்தியமூர்த்தி பவனில் இருந்து இன்று காங்கிரஸ் நடைபயணம் தொடங்கியது. நடைபயணத்தை கே.எஸ்.அழகிரி தொடங்கி வைத்தார். அகில இந்திய காங்கிரஸ் மூத்த தலைவர்கள் திக் விஜய்சிங், ஜார்ஜ் ராபின்சன் ஆகியோர் பங்கேற்று பலூன்களை பறக்க விட்டனர்.
நிகழ்ச்சியில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ப.சிதம்பரம், குமரி அனந்தன், ஸ்ரீவல்ல பிரசாத், திருநாவுக்கரசர் மற்றும் செல்வப்பெருந்தகை, மாவட்ட தலைவர்கள் ரஞ்சன்குமார், திரவியம் கோபன்னா, தாமோதரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
நடைபயண ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கான காங்கிரஸ் தொண்டர்கள் காங்கிரஸ் கொடிகளை ஏந்தி சென்றனர்.
75 கி.மீ. தூரம் கொண்ட நடைபயணம் மூன்று நாட்கள் நடைபெறுகிறது. ஸ்ரீபெரும்புதூரில் முடிவடைகிறது.