தமிழ்நாடு

முனைவர் இஞ்ஞாசிமுத்துக்கு அப்துல்கலாம் விருதை முதலமைச்சர் முக ஸ்டாலின் வழங்கினார்

முனைவர் இஞ்ஞாசிமுத்துக்கு அப்துல் கலாம் விருது

Published On 2022-08-15 08:42 GMT   |   Update On 2022-08-15 08:42 GMT
  • மாற்றுத் திறனாளிகள் நலனுக்காக மிகச் சிறந்த சேவை புரித்தோருக்கான விருது ஊட்டி மருத்துவர் பா. ஜெய்கணேஷ் மூர்த்திக்கு வழங்கப்பட்டது.
  • மகளிர் நலத்திற்கான சிறந்த சேவைக்காக தொண்டாற்றியவர்களுக்கான விருது வானவில் அறக்கட்டளைக்கு வழங்கப்பட்டது.

சென்னை:

சென்னையில் இன்று நடந்த சுதந்திர தின விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை சேவியர் கல்லூரி ஆய்வு நிறுவன இயக்குனர் முனைவர் இஞ்ஞாசிமுத்துவுக்கு டாக்டர் அப்துல்கலாம் விருதினை வழங்கினார்.

முனைவர் ச. இஞ்ஞாசிமுத்து, பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரியில் உள்ள சவேரியார் ஆய்வு நிறுவனத்தின் இயக்குநராக உள்ளார்.

தேனி மாவட்டத்தில் உள்ள டி. சிந்தலச்சேரி என்ற சிறிய கிராமத்தைச் சேர்ந்த இவர், அறிவியல் மீதான ஆர்வம், கடின உழைப்பு மற்றும் விடாமுயற்சியால். புகழ்பெற்ற ஒரு விஞ்ஞானியாக உருவெடுத்துள்ளார். 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில், அமெரிக்காவின் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்களால் தாவர உயிரியல் துறையில், உலகின் முதல் 2 சதவீத விஞ்ஞானிகளில் ஒருவராகவும், இந்தியாவில் 10-வது சிறந்த விஞ்ஞானியாகவும் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

விஞ்ஞான ஆராய்ச்சியின் மீதான தனது ஆர்வத்தின் மூலம் சிறந்த அறிவியல் ஆராய்ச்சிகளை போதுமான ஊக்கத்துடனும் உறுதியுடனும் செய்ய முடியும் என்பதை இவர் நிரூபித்துள்ளார்.

அறிவியல் ஆராய்ச்சித் துறையில் முனைவர் இஞ்ஞாசிமுத்து சேவையை பாராட்டும் விதமாக 'டாக்டர் ஆ.ப.ஜெ. அப்துல் கலாம் விருது' அரசு வழங்கி சிறப்பித்தது.

மாற்றுத் திறனாளிகள் நலனுக்காக மிகச் சிறந்த சேவை புரித்தோருக்கான விருது ஊட்டி மருத்துவர் பா. ஜெய்கணேஷ் மூர்த்திக்கு வழங்கப்பட்டது. இவர் ஊட்டி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை எலும்பு முறிவு மருத்துவராக பணிபுரிந்து வருகிறார். 820-க்கும் மேற்பட்ட அறுவை சிகிச்சை மேற்கொண்டு நோயாளிகளை குணப்படுத்தி உள்ளார்.

அரும்பணி ஆற்றிய சிறந்த தொண்டு நிறுவனத்திற்கான தமிழ்நாடு அரசின் விருது வழங்கப்பட்டது. சிறந்த சமூகப் பணியாளர் விருது மதுரையை சேர்ந்த சு.அமுதசாந்திக்கு வழங்கப்பட்டது. இவர் கடந்த 16 ஆண்டுகளாக தியாகம் பெண்கள் அறக்கட்டளையின் நிர்வாகியாக சமூகப் பணியாற்றி வருகிறார். தனது அறக்கட்டளையின் மூலம் பெண் மாற்றுத்திறனாளிகளுக்கு தையல் பயிற்சி, கணினி பயிற்சி, கைவினைப் பொருட்கள் தயாரித்தல் பயிற்சி ஆகியவற்றை வழங்கியும், சுய உதவிக் குழு அமைத்தும் சமூகப் பணியாற்றி வருகிறார்.

கல்வி பயிலும் 25 கிராமங்களைச் சேர்ந்த 5,280 மாற்றுத்திறனாளிகளுக்கு மாலை நேர வகுப்புகள், மாற்றுத்திறனாளிகளுக்கு ஆலோசனை மற்றும் மறுவாழ்வு உதவிகள் ஆகியவற்றை வழங்கியுள்ளார்.

மாற்றுத் திறனாளிகளுக்கு அதிக அளவில் வேலைவாய்ப்பு அளித்த சிறந்த தனியார் நிறுவனமான டாபே 'ஜெ' ரிஹாப் சென்டருக்கு விருது வழங்கப்பட்டது.

மாற்றுத்திறனாளிகளுக்காக சிறப்பாக செயல்படும் சிறந்த மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியாக திண்டுக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தேர்ந்தெடுக்கப்பட்டு விருது வழங்கப்பட்டது.

மகளிர் நலத்திற்கான சிறந்த சேவைக்காக தொண்டாற்றியவர்களுக்கான விருது வானவில் அறக்கட்டளைக்கு வழங்கப்பட்டது.

"வானவில் அறக்கட்டளை" தொண்டு நிறுவனம் கடந்த 2005-ம் ஆண்டு நிர்வாக அறங்காவலர், ஆர்.ரேவதியால் துவங்கப்பட்டு நாகப்பட்டினம் மாவட்டம், கீழ்க்கரையிருப்பு கிராமத்தில் செயல்பட்டு வருகிறது.

நாடோடி பெண்கள் சொந்தமாக சிறு தொழில் தொடங்க திறன் பயிற்சி மற்றும் வட்டியில்லா கடனுதவி வழங்கும் வாழ்வாதார திட்டத்தை நடத்தி நாகப்பட்டினம், திருவாரூர் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் இதுவரை 500-க்கும் மேற்பட்ட நாடோடி பழங்குடியின பெண்கள் பயனடைய செய்துள்ளனர்.

சிறந்த சமூக சேவகர் விருது டாக்டர் பங்கஜத்துக்கு வழங்கப்பட்டது. இவர் லட்சுமி ஆசிரியர் பயிற்சி கல்லூரி, காந்தி கிராமம் மற்றும் துறையில் விரிவுரையாளராகவும், லட்சுமி கல்வியியல் கல்லூரியில் முதல்வராகவும் பணியாற்றியுள்ளார்.

பெண்களுக்காக சிறந்த முறையில் தொண்டாற்றி வரும் டாக்டர் பங்கஜத்தின் சமூக சேவையைப் பாராட்டி 2022-ம் ஆண்டிற்கான தமிழக அரசின் சிறந்த சமூக சேவகருக்கான விருது வழங்கப்பட்டது.

Tags:    

Similar News