விபத்து ஏற்பட்ட பட்டாசு ஆலையில் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்த காட்சி.
நள்ளிரவில் பட்டாசு ஆலையில் விபத்து- தொழிலாளர்கள் இல்லாததால் பெரும் விபத்து தவிர்ப்பு
- ஆலையில் 2 அறையில் தயார் செய்து வைக்கப்பட்டு இருந்த பட்டாசுகள் வெடித்து விபத்து ஏற்பட்டதில் 2 அறைகளும் தரைமட்டமனது.
- தீயணைப்பு துறையினர் விரைந்து சென்று தீயை அணைத்தனர்.
கோவில்பட்டி:
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ராஜீவ் நகரைச் சேர்ந்தவர் ஜெயராஜ்.
இவர் கோவில்பட்டி அருகேயுள்ள முக்கூட்டு மலை கிராமத்தில் பட்டாசு ஆலை நடத்தி வருகிறார். நேற்று வழக்கம் போல பணிகள் முடிந்ததும் தொழிலாளர்கள் வீட்டிற்கு சென்றுவிட்டனர்.
இந்நிலையில் நள்ளிரவில் திடீரென பட்டாசு ஆலையில் இருந்து பயங்கர சத்ததுடன் பட்டாசுகள் வெடித்து சிதறி உள்ளது. ஆலையில் 2 அறையில் தயார் செய்து வைக்கப்பட்டு இருந்த பட்டாசுகள் வெடித்து விபத்து ஏற்பட்டதில் 2 அறைகளும் தரைமட்டமனது.
மேலும் தொடர்ந்து பட்டாசுகள் பலத்த சத்தத்துடன் வெடித்து கொண்டு இருந்தன. இதனை பார்த்த அருகில் இருந்த மக்கள் கழுகுமலை போலீஸ் நிலையத்திற்கும், தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் கொடுத்துள்ளனர்.
தீயணைப்பு துறையினர் விரைந்து சென்று தீயை அணைத்தனர்.
இரவு நேரம் என்பதால் தொழிலாளர்கள் யாரும் இல்லை. இதனால் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் எதுவும் இல்லமால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
கோவில்பட்டி டி.எஸ்.பி. வெங்கடேஷ் மற்றும் போலீசார் விபத்து ஏற்பட்ட இடத்தினை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும், விபத்து குறித்து கழுகுமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.