தமிழ்நாடு

எடப்பாடி பழனிசாமி

தொண்டர்களை தங்கள் பக்கம் இழுக்க சுற்றுப்பயண திட்டத்தில் ஓ.பி.எஸ்.-ஐ முந்திய எடப்பாடி

Published On 2022-08-10 10:27 GMT   |   Update On 2022-08-10 10:27 GMT
  • சேலத்தில் இருந்து சென்னை வரை வழி நெடுக எடப்பாடி பழனிசாமியின் கட் அவுட்கள் வைக்கப்பட்டு இருந்தன.
  • சேலத்தில் இருந்து தனது பயணத்தை தொடங்கிய எடப்பாடி பழனிசாமி வழி நெடுகிலும் அ.தி.மு.க. நிர்வாகிகளை உற்சாகப்படுத்திவிட்டு சென்னைக்கு வந்துள்ளார்.

சென்னை:

அ.தி.மு.க.வில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இடையே ஏற்பட்ட விரிசல் நாளுக்கு நாள் தீவிரமாகி கொண்டிருக்கிறது. தேர்தல் ஆணையம், கோர்ட்டு, சட்டசபை, வங்கி போன்றவற்றை இரு தரப்பினரும் நாடி சென்று பலப் பரீட்சையில் ஈடுபட்டுள்ளனர்.

இதற்கிடையே அவர்கள் இருவரும் மாநிலம் முழுவதும் கட்சி நிர்வாகிகளையும், தொண்டர்களையும் தங்கள் பக்கம் இழுக்கும் நடவடிக்கைகளையும் தொடங்கி உள்ளனர். கடந் த ஒரு வாரமாக தங்களது சொந்த ஊரில் முகாமிட்டு இருந்த இருவரும் சென்னை திரும்பியுள்ளனர்.

நேற்று ஓ.பன்னீர் செல்வம் தனது ஆதரவாளர்களுடன் தீவிர ஆலோசனை நடத்தினார். தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்வது பற்றி அப்போது ஆலோசிக்கப்பட்டது.

அவர் ஆலோசனை நடத்திக்கொண்டிருந்த அதே சமயத்தில் எடப்பாடி பழனிசாமி நேற்று தனது அதிரடி பயணத்தை தொடங்கினார். தொண்டர்களை இழுப்பதற்காக ஓ.பன்னீர்செல்வத்தின் நடவடிக்கைகளை முந்த வேண்டும் என்ற நோக்கத்தில் நேற்று எடப்பாடி பழனிசாமி சேலத்தில் இருந்து சென்னைக்கு காரில் புறப்பட்டார்.

அவருக்கு வழிநெடுக சேலம், தர்மபுரி, கிருஷ்ண கிரி, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, வேலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் அ.தி.மு.க. நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். சேலத்தில் இருந்து சென்னை வரை வழி நெடுக எடப்பாடி பழனிசாமியின் கட் அவுட்கள் வைக்கப்பட்டு இருந்தன.

அவரை வரவேற்று மாவட்ட நிர்வாகிகள் கோலாகலமாக ஏற்பாடுகள் செய்திருந்தனர். ஒவ்வொரு முக்கிய சந்திப்பிலும் தாரை, தப்பட்டை முழங்க எடப்பாடி பழனிசாமிக்கு உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது. ஆங்காங்கே மேடைகள் அமைத்து அவரை பேச வைத்தனர்.

பல இடங்களில் கரகாட்டம், ஒயிலாட்டம் போன்றவை நடத்தப்பட்டன. சேலத்தில் இருந்து தனது பயணத்தை தொடங்கிய எடப்பாடி பழனிசாமி வழி நெடுகிலும் அ.தி.மு.க. நிர்வாகிகளை உற்சாகப்படுத்திவிட்டு சென்னைக்கு வந்துள்ளார். அடுத்தகட்ட பயணத்தை தொடங்க அவர் ஆலோசனை நடத்தி வருகிறார்.

Tags:    

Similar News