வழக்கு விசாரணை முடிந்த பிறகே அ.தி.மு.க. பொதுச்செயலாளர் தேர்தலை நடத்த முடிவு- சி.வி.சண்முகம்
- அ.தி.மு.க. பொதுச் செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்க ஓ.பி.எஸ். தரப்பினர் கோரிக்கை விடுத்தனர்.
- வழக்கு விசாரணை முடிந்த பிறகே அ.தி.மு.க. பொதுச்செயலாளர் தேர்தல் நடத்தப்படும்.
சென்னை:
அ.தி.மு.க. பொதுக்குழு விவகாரம் தொடர்பான வழக்கு விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் இன்று நடைபெற்றதையொட்டி, முன்னாள் அமைச்சரும், எம்.பி.யுமான சி.வி.சண்முகம், வக்கீல் ஐ.எஸ்.இன்பதுரை ஆகியோர் டெல்லி சென்றிருந்தனர்.
கோர்ட்டு விசாரணைக்கு பிறகு சி.வி.சண்முகம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறும்போது, அ.தி.மு.க. பொதுச் செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்க ஓ.பி.எஸ். தரப்பினர் கோரிக்கை விடுத்தனர்.
அந்த கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்படவில்லை. அதை கோர்ட்டு உத்தரவாதம் பிறப்பிக்கவில்லை. எங்கள் தரப்புகள் கூறும்போது, பொதுச் செயலாளர் தேர்தல் தொடர்பான எந்தவித நடவடிக்கைகளையும் தொடங்கவில்லை என்று கோர்ட்டில் தெரிவித்து உள்ளோம்.
பொதுச்செயலாளர் தேர்தலுக்கான அறிவிப்பையே நாங்கள் வெளியிடவில்லை. வழக்கு நிலுவையில் உள்ளபோது தேர்தலை எப்படி நடத்துவோம். நாங்கள் சட்டபடியே செயல்படுகிறோம்.
வழக்கு விசாரணை முடிந்த பிறகே அ.தி.மு.க. பொதுச்செயலாளர் தேர்தல் நடத்தப்படும். வழக்கை விரிவான விசாரணைக்காக சுப்ரீம் கோர்ட்டு ஒத்தி வைத்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.