அண்ணா சாலையில் 3,200 அடி நீள தேசிய கொடியுடன் காங்கிரசார் பிரமாண்ட பேரணி
- தேசிய கொடியின் முகப்பில் எஸ்.சி. துறை தலைவர் ரஞ்சன்குமார் தாங்கியபடி தலைமை ஏற்று சென்றார்.
- காமராஜர் சிலை முன்பு காங்கிரசார் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
சென்னை:
நாட்டின் 75-வது சுதந்திர தின விழாவையொட்டி அனைத்து மாவட்டங்களிலும் காங்கிரஸ் சார்பில் 75 கிலோ மீட்டர் பாதயாத்திரை கடந்த சில நாட்களாக நடத்தப்பட்டது. இதன் நிறைவு நிகழ்ச்சி சுதந்திர தினமான இன்று சென்னையில் நடைபெற்றது.
இதையொட்டி காங்கிரஸ் எஸ்.சி. துறை சார்பில் ஆயிரம் மீட்டர் (3,280 அடி) நீளம் 15 அடி அகலத்தில் பிரமாண்டமான தேசிய கொடி தயார் செய்யப்பட்டது. கொடியின் முகப்பில் எஸ்.சி. துறை தலைவர் ரஞ்சன்குமார் தாங்கியபடி தலைமை ஏற்று சென்றார். கொடி நிழலில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி மற்றும் மாநில, மாவட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் அணிவகுத்தபடி கொடியை தாங்கியபடி பேரணியாக சென்றனர்.
பேரணி காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் புறப்பட்டு ஜெனரல் பீட்டர்ஸ் சாலை, அண்ணா சாலை வழியாக பல்லவன் இல்லம் அருகே உள்ள ஜிம்கானா கிளப் காமராஜர் சிலை முன்பு நிறைவடைந்தது.
அதைத்தொடர்ந்து அங்குள்ள காமராஜர் சிலைக்கு அழகிரி மாலை அணிவித்தார். பின்னர் காமராஜர் சிலை முன்பு காங்கிரசார் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.