அக்னிபாத் எதிர்ப்பு போராட்டம்: விஜய் வசந்த் எம்.பி.- காங்கிரஸ் நிர்வாகிகள் பங்கேற்பு
- அக்னிபாத் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்தல்
- கன்னியாகுமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
கன்னியாகுமரி:
அக்னிபாத் திட்டத்தை திரும்பப் பெற வேண்டுமென்ற கோரிக்கையை முன்வைத்து தமிழ்நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சி இன்று போராட்டம் நடத்தியது. கன்னியாகுமரியில் நடைபெற்ற போராட்டத்தில் விஜய் வசந்த் எம்.பி. மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.
இது தொடர்பாக விஜய் வசந்த் எம்.பி. கூறியிருப்பதாவது:-
இளைஞர்களின் எதிர்காலத்தை இருளில் மூழ்க செய்து, இந்திய ராணுவத்தின் தரத்தை கேள்வி குறியாக்கும் அக்னிபாத் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும் என வலியுறுத்தி அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் அழைப்பை ஏற்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி அவர்களின் வழிகாட்டுதலுக்கு ஏற்ப இன்று குமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நாகர்கோவில் மாநகர மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு இந்த புதிய திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும் என வலியுறுத்தினோம்.
மாநகர மாவட்ட தலைவர் நவீன்குமார் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மாமன்ற மண்டல தலைவர் செல்வகுமார், குமரி கிழக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் டைசன் ராஜா, கிழக்கு மாவட்ட மகளிர் காங்கிரஸ் தலைவி அருள் சபிதா, மாநில செயலாளர் சீனிவாசன், முன்னாள் மாவட்ட தலைவர்கள் ராதாகிருஷ்ணன், ராபர்ட் புரூஸ், மாமன்ற உறுப்பினர் அனுஷா பிரைட், மாநில இளைஞர் காங்கிரஸ் துணை தலைவர் நரேந்திர தேவ், கிழக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் துணைத் தலைவர் சகாய பிரவீன், முன்னாள் நகர தலைவர் அலெக்ஸ் மற்றும் நிர்வாகிகள், தொண்டர்கள் பெருமளவில் கலந்து கொண்டனர்.
இவ்வாறு விஜய் வசந்த் கூறி உள்ளார்.