ஆம்பூர் அருகே ஆட்டை விழுங்கிய மலைப்பாம்பு
- உமா தனது வெள்ளாடுகளை ஊட்டல் பைரப்பள்ளி காப்புகாட்டு பகுதியில் மேய்ச்சலுக்காக ஓட்டிச் சென்றார்.
- காப்புக்காட்டில் அடர்ந்த புதர் பகுதியில் படுத்திருந்த மலைப்பாம்பு ஒன்று ஆட்டை விழுங்கிகொண்டிருந்தது.
ஆம்பூர்:
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த ஊட்டல் பகுதியில் அடர்ந்த காப்புக்காடு உள்ளது. இங்கு ஏராளமான வனவிலங்குகள் உள்ளன.
அப்பகுதியை சேர்ந்தவர்கள் காப்பு காட்டிற்கு காலையில் ஆடு, மாடுகளை ஓட்டிச்சென்று மேய்த்து விட்டு மாலை 4 மணி அளவில் வீட்டிற்கு திரும்புவது வழக்கம்.
ஆம்பூர் அடுத்த பைரப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் முனுசாமி. இவரது மனைவி உமா (55), இவர் சொந்தாமாக 15-க்கும் மேற்பட்ட வெள்ளாடுகளை வளர்த்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று வழக்கம் போல் உமா தனது வெள்ளாடுகளை ஊட்டல் பைரப்பள்ளி காப்புகாட்டு பகுதியில் மேய்ச்சலுக்காக ஓட்டிச் சென்றார். மாலை தனது வெள்ளாடுகளை வீட்டிற்கு ஓட்டி வந்தார்.
அப்போது தனது வெள்ளாடு கூட்டத்திலிருந்து ஒரு ஆடு காணாமல் போனது. அந்த ஆட்டை தேடிக்கொண்டு உமா வனப்பகுதிக்கு சென்றார். அப்போது காப்புக்காட்டில் அடர்ந்த புதர் பகுதியில் படுத்திருந்த மலைப்பாம்பு ஒன்று ஆட்டை விழுங்கிகொண்டிருந்தது. ஆட்டின் முழு உடலையும் முழுவதுமாக விழுங்குவதை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து உமா ஆம்பூர் வனத்துறையிருக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு வந்த ஆம்பூர் வனத்துறையினர் மலைப்பாம்பை பிடித்து அடர்ந்த காட்டில் விட்டனர்.
முழு ஆட்டை மலைப்பாம்பு முழுவதுமாக விழுங்கிய சம்பவம் ஆம்பூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.