தமிழ்நாடு
வைகை அணை

67 அடியில் நீடிக்கும் வைகை அணை நீர்மட்டம்

Published On 2022-05-23 04:56 GMT   |   Update On 2022-05-23 04:56 GMT
வழக்கமாக வைகை அணையில் இருந்து ஜூன் முதல் வாரத்தில் முதல்போக பாசனத்திற்கும், அக்டோபரில் 2ம் போக பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
கூடலூர்:

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணையின் மூலம் தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை உள்ளிட்ட 5 மாவட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

மேலும் மதுரை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும் உள்ளது. 71 அடி உயரம் கொண்டுள்ள வைகை அணையில் தற்போது நீர்மட்டம் 66.93 அடியாக உள்ளது.

கடந்த ஆண்டு பருவமழை கைகொடுத்த நிலையில் அணையின் நீர்மட்டம் 70 அடியை எட்டியது. அதன்பின்னர் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது. இருந்தபோதும் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அணையின் நீர்மட்டம் 67 அடியிலேயே நீடித்து வருகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அமைந்துள்ளனர்.

வழக்கமாக வைகை அணையில் இருந்து ஜூன் முதல் வாரத்தில் முதல்போக பாசனத்திற்கும், அக்டோபரில் 2ம் போக பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

கடந்த 2 ஆண்டுகளாக போதிய அளவு நீர் இருந்ததால் ஜூன் மாதத்தில் தண்ணீர் திறக்கப்பட்டது. அதன்படி இந்த ஆண்டும் வருகிற 2ந் தேதி தண்ணீர் திறக்க தமிழக அரசுக்கு பொதுப்பணித்துறையினர் அறிக்கை சமர்ப்பித்து உள்ளனர்.

இதற்கான அறிவிப்பை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. முதல் போக பாசனத்திற்காக அணையில் இருந்து கால்வாய் வழியாக 900 கன அடி தண்ணீர் 120 நாட்களுக்கு திறக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன்மூலம் திண்டுக்கல் மாவட்டத்தில் 1797 ஏக்கர் மதுரை மாவட்டத்தில் வடக்கு வட்டத்தில் 26,792 ஏக்கர், வாடிப்பட்டி வட்டத்தில் 16,452 ஏக்கர் என மொத்தம் 45,041 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும்.

சிவகங்கை மாவட்ட வைகை பூர்வீக பாசன பகுதிகளுக்கு வைகை அணையில் இருந்து இன்று முதல் 28ந் தேதி வரை 582 மில்லியன் கன அடி திறக்கவும், ஜூன் 3ந் தேதி முதல் கண்மாய் பகுதியில் உள்ள வேளாண் நிலங்கள் பாசன வசதி பெறும் வகையில் மே 29 முதல் ஜூன் 1 வரை 3 நாட்களுக்கு 267 மி.கன அடி நீர் திறக்கவும் முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

அணையில் இருந்து மதுரை மாநகர குடிநீருக்காக 72 கன அடி நீர் திறக்கப்படுகிறது. நீர் வரத்து இல்லை.

முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 131.55 அடியாக உள்ளது. 642 கன அடி நீர் வருகிறது. 100 கன அடி நீர் திறக்கப்படுகிறது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 38.45 அடியாக உள்ளது. 7 கன அடி நீர் வருகிறது. திறப்பு இல்லை. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 99.05 அடியாக உள்ளது. வரத்து இல்லாத நிலையில் 3 கன அடி நீர் திறக்கப்படுகிறது.

பெரியாறு 1, தேக்கடி 3.6 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது.
Tags:    

Similar News