தமிழ்நாடு
தரை இறங்கியபோது விமானம் மீது லேசர் ஒளி அடித்த மர்ம நபர்கள்

சென்னையில் தரை இறங்கியபோது விமானம் மீது லேசர் ஒளி அடித்த மர்ம நபர்கள்

Published On 2022-05-19 12:22 GMT   |   Update On 2022-05-19 12:22 GMT
சென்னையில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு பரங்கிமலை மலைப்பகுதியில் இருந்து 2 முறை லேசா் ஒளி விமானத்தின் மீது அடித்த சம்பவம் நடந்துள்ளது.
ஆலந்தூர்:

இலங்கை, கொழும்பு நகரில் இருந்து சென்னைக்கு இன்று அதிகாலை 4:50 மணியளவில் பயணிகள் விமானம் வந்து கொண்டு இருந்தது. அதில் 146 பயணிகள் இருந்தனர்.

சென்னை விமான நிலையத்தில் தரை இறங்குவதற்காக விமானம் தாழ்வாக பறந்து வந்தது. அப்போது அந்த விமானத்தின் முன்பகுதியில் பைலட் இருக்கையை நோக்கி எங்கிருந்தோ வந்த சக்திவாய்ந்த லேசா் லைட் ஒளி அடித்தது.

அந்த லேசா் ஒளி,விமானத்தை இயக்கிக்கொண்டிருந்த விமானியின் கண்களுக்கு நேராக அடிக்கப்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த விமானி சாமா்த்தியமாக செயல்பட்டு, விமானத்தை பத்திரமாக சென்னை விமானநிலையத்தில் தரை இறக்கினாா்.

இதுகுறித்து விமானி, சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தார். அதிகாரிகள் ரேடாா் கருவிகள் மூலமாக ஆய்வு செய்த போது, பழவந்தாங்கல் பகுதியில் இருந்து லேசா் ஒளி அடிக்கப்பட்டது தெரியவந்தது.

பழவந்தாங்கல் பகுதியில் உள்ள உயரமான கட்டிடத்திலிருந்து மர்ம நபர்கள் யாரோ,சக்தி வாய்ந்த லேசா் கருவியில் இருந்து இந்த லேசர் ஒளியை விமானத்தை நோக்கி அடித்துள்ளனா்.

இதையடுத்து அந்த விமான நிறுவனமும், சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறை அதிகாரிகளும் விமான நிலைய போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதே போல் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு பரங்கிமலை மலைப்பகுதியில் இருந்து 2 முறை லேசா் ஒளி விமானத்தின் மீது அடித்த சம்பவம் நடந்துள்ளது. இது தொடர்பாக அப்போது 2 பேர் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News