தமிழ்நாடு
வாழப்பாடி அருகே திருமணம் செய்துகொள்வதாக இளம்பெண்ணை ஏமாற்றிய துணை ராணுவ வீரர் மீது வழக்கு
தன்னுடன் நீண்ட வருடமாக பழகி வருவதாகவும், தன்னை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி ஏமாற்றியதாகவும் துணை ராணுவ வீரர் குறித்து போலீசில் இளம்பெண் புகார் அளித்துள்ளார்.
வாழப்பாடி:
சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்த பேளூர் பகுதியை சேர்ந்தவர் நடராஜ். இவருடைய மகன் அஜித்குமார் (வயது 26). இவர் துணை ராணுவ பிரிவான மத்திய தொழில்துறை பாதுகாப்பு படையில் (சி.ஐ.எஸ்.எப்.) வீரராக பணிபுரிந்து வருகிறார்.
அதே பகுதியை சேர்ந்தவர் கலைச்செல்வி. இவரது கணவர் இறந்து விட்டார். இந்த நிலையில் அஜித்குமாருக்கும், கலைச்செல்விக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. மேலும் அஜித்குமார், கலைசெல்வியிடம் திருமணம் செய்து கொள்வதாக கூறி நெருங்கி பழகி வந்தார்.
இந்த நிலையில், அஜித்குமார் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த கலைச்செல்வி வாழப்பாடி போலீஸ் நிலையத்தில் அஜித்குமார் மீது புகார் கொடுத்தார்.
அதில், அஜித்குமார் தன்னுடன் நீண்ட வருடமாக பழகி வருவதாகவும், தன்னை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி ஏமாற்றியதாகவும், தற்போது வேறு பெண்ணை திருமணம் செய்து கொள்ள உள்ளதாகவும், இதுகுறித்து கேட்டதற்கு அஜித்குமார் மற்றும் அவரது தாய் அம்மாசி இருவரும் தன்னை தகாத வார்த்தையால் பேசி தாக்கியதாகவும் கூறியிருந்தார்.
அதன் பேரில் போலீசார், துணை ராணுவ வீரர் அஜித்குமார் மீதும் மற்றும் அவரது தாயார் மீதும் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.