தமிழ்நாடு
மேட்டூர் அணை

மேட்டூர் அணை நீர்மட்டம் 109 அடியாக உயர்வு

Published On 2022-05-17 03:38 GMT   |   Update On 2022-05-17 03:38 GMT
மேட்டூர் அணைக்கு நேற்று காலை வினாடிக்கு 9 ஆயிரத்து 314 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று வினாடிக்கு 8 ஆயிரத்து 30 கன அடியாக சரிந்தது.
மேட்டூர்:

தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக ஒகேனக்கல்லுக்கு தொடர்ந்து தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. ஒகேனக்கல்லில் நேற்று மாலை 8 ஆயிரம் கன அடிக்கும் அதிகமாக தண்ணீர் வந்தது.

ஒகேனக்கல்லில் மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் உள்பட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. ஒகேனக்கல் அருவிகளில் சுற்றுலா பயணிகள் ஆனந்தமாக குளித்து மகிழ்கிறார்கள். மேலும் படகில் குடும்பத்துடன் சவாரியும் சென்று இயற்கை அழகை ரசித்து வருகிறார்கள்.

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வரும் தண்ணீருடன் மழை நீரும் சேர்ந்து மேட்டூர் அணைக்கு வருகிறது. மேட்டூர் அணைக்கு நேற்று காலை வினாடிக்கு 9 ஆயிரத்து 314 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று வினாடிக்கு 8 ஆயிரத்து 30 கன அடியாக சரிந்தது.

அணையில் இருந்து காவிரியில் 1500 கன அடி தண்ணீர் குடிநீருக்காக திறந்து விடப்பட்டுள்ளது. அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து குறைந்த அளவே தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

நேற்று 108.60 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று மேலும் உயர்ந்து 108.98 அடியானது. பிற்பகலில் 109 அடியை தாண்டியது. இனி வரும் நாட்களில் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து மீண்டும் அதிகரிக்கும் பட்சத்தில் மேட்டூர் அணை நீர்மட்டம் மேலும் வேகமாக உயர வாய்ப்புள்ளது.

Tags:    

Similar News