தமிழ்நாடு
இறந்து கிடந்த சிறுத்தை

மர்மமான முறையில் இறந்து கிடந்த சிறுத்தை- மின்சாரம் வைத்து கொல்லப்பட்டதா?

Published On 2022-05-12 08:15 GMT   |   Update On 2022-05-12 08:15 GMT
உடற்கூராய்வின் முடிவில் சிறுத்தை இறந்ததற்கான காரணம் தெரியவரும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.
ஆனைமலை:

கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள வரட்டுப்பாறையை சேர்ந்தவர் இப்ராகிம்(வயது45).

இவர் தனது வீட்டின் பின்புறம் கோழிக்கூண்டு வைத்து கோழி வளர்த்து வந்தார்.

தினமும் காலையில் கோழிகளுக்கு இரை போடுவதற்காக வீட்டின் பின்புறம் இப்ராகிம் செல்வது வழக்கம். அதன்படி இன்று காலை இப்ராகிம் அங்கு சென்றார். அப்போது கோழிக்கூண்டின் அருகே சிறுத்தை ஒன்று மர்மமான முறையில் இறந்து கிடந்தது.

இதை பார்த்ததும் அதிர்ச்சியான அவர் உடனடியாக ஆனைமலை புலிகள் காப்பக அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் வனத்துறையினர் வரட்டுப்பாறை பகுதிக்கு வந்தனர்.

பின்னர் அங்கு இறந்து கிடந்த சிறுத்தையை பார்த்தனர். அப்போது சிறுத்தையின் நகங்கள் கோழிக்கூண்டின் இரும்பு கம்பியில் சிக்கியவாறு இருந்தது. மேலும் சிறுத்தையின் உடலில் காயங்கள் ஏதாவது இருக்கிறதா என்பதையும் பார்த்தனர். அப்போது உடலில் எந்த பகுதியிலும் காயங்கள் இல்லை என்பதை அறிந்தனர். இதையடுத்து சிறுத்தை இறந்ததற்கான காரணம் குறித்து விசாரிக்க தொடங்கினர்.

சிறுத்தை இறந்து கிடந்ததை முதலில் பார்த்த வீட்டின் உரிமையாளர் இப்ராகிமிடம் வனத்துறையினர் விசாரணை நடத்தினர். அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில்களை தெரிவித்தார். மேலும் அந்த பகுதியை சேர்ந்தவர்களிடம் விசாரித்தபோது, இவர் வீட்டில் வளர்த்து வந்த கோழிகள் தினமும் காணாமல் போனதாக தெரிவித்தனர். இதனால் இப்ராகிமே கோழிகள் தினமும் காணாமல் போவதால் கோழிக்கூண்டில் மின்சாரம் பாய்ச்சியிருந்தாரா? அதன் காரணமாக சிறுத்தை இறந்ததா? அல்லது வேறு ஏதாவது காரணமா என்ற கோணத்திலும் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

கால்நடை டாக்டர்களை வரவழைத்து, சிறுத்தையை உடற்கூராய்வு செய்யும் பணியும் தொடங்கியுள்ளது. உடற்கூராய்வின் முடிவில் சிறுத்தை இறந்ததற்கான காரணம் தெரியவரும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.
Tags:    

Similar News