தமிழ்நாடு
கிருஷ்ணா தண்ணீர்

பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா நீர்வரத்து 450 கன அடியாக அதிகரிப்பு

Published On 2022-05-12 07:26 GMT   |   Update On 2022-05-12 07:26 GMT
வரும் நாட்களில் கண்டலேறு அணையில் இருந்து கிருஷ்ணா தண்ணீர் திறப்பு மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தண்ணீர் வரத்து காரணமாக பூண்டி ஏரியின் நீர்மட்டம் மெல்ல மெல்ல உயர்ந்து வருகிறது.
ஊத்துக்கோட்டை:

சென்னை நகர மக்களின் குடிநீர் தேவையை நிறைவேற்றும் முக்கிய ஏரிகளில் ஒன்று பூண்டி ஏரி. சென்னையில் குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு கிருஷ்ணா நீர் ஒப்பந்தப்படி கடந்த 5ந் தேதி ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது.

ஆரம்பத்தில் வினாடிக்கு 500 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டது அதன்பின்னர் தண்ணீர் திறப்பு 1500 கன அடியாக அதிகரிக்கப்பட்டது.

இந்த தண்ணீர் 152 கிலோ மீட்டர் தூரம் பாய்ந்து கடந்த 8ந்தேதி தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை அருகே உள்ள தாமரைக்குப்பம் ஜீரோ பாயிண்டுக்கு வந்தடைந்தது. அன்று இரவே கிருஷ்ணா தண்ணீர் பூண்டி ஏரிக்கு சென்றடைந்தது.

ஆரம்பத்தில் பூண்டி ஏரிக்கு 293 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. தற்போது கிருஷ்ணா நீர்வரத்து 450 கனஅடியாக அதிகரித்து உள்ளது. ஜீரோபாயிண்டுக்கு 533 கன அடி நீர் வருகிறது.

வரும் நாட்களில் கண்டலேறு அணையில் இருந்து கிருஷ்ணா தண்ணீர் திறப்பு மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தண்ணீர் வரத்து காரணமாக பூண்டி ஏரியின் நீர் மட்டம் மெல்ல மெல்ல உயர்ந்து வருகிறது.

பூண்டி ஏரியின் உயரம் 35 அடி ஆகும். இதில் 3.231 டி.எம்.சி. தண்ணீரை சேமித்து வைக்கலாம். இன்று காலை நிலவரப்படி ஏரியில் 1.279 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது. பூண்டி ஏரியில் இருந்து புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு இணைப்பு கால்வாய் வழியாக வினாடிக்கு 653 கனஅடி வீதம் தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. அதேபோல் பேபி சென்னை குடிநீர் வாரியத்துக்கு வினாடிக்கு 13 கனஅடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
Tags:    

Similar News