தமிழ்நாடு
மேட்டூர் அணை

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 5,310 கன அடியாக அதிகரிப்பு

Published On 2022-05-04 04:07 GMT   |   Update On 2022-05-04 04:07 GMT
மேட்டூர் அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து மிக குறைந்த அளவே தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
சேலம்:

தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியான ஒகேனக்கல் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து வருகிறது.

ஒகேனக்கல்லுக்கு நேற்று முன்தினம் விநாடிக்கு 5 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று 7 ஆயிரம் கன அடியாக அதிகரித்தது. இதனால் ஒகேனக்கல்லில் உள்ள மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் உள்பட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

இந்த அருவிகள் சுற்றுலா பயணிகள் ஆனந்தமாக குளித்து மகிழ்கின்றனர். மேலும் பரிசல்ககளிலும் உற்சாகமாக சென்று இயற்கை அழகை கண்டு ரசித்து வருகிறார்கள். ஒகேனக்கல்லுக்கு வரும் தண்ணீர் நேராக மேட்டூர் அணைக்கு வருகிறது. இதனால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து வருகிறது.

மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் விநாடிக்கு 1850 கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று மேலும் அதிகரித்து 3 ஆயிரத்து 111 கன அடியாக வந்தது. இன்று நீர்வரத்து மேலும் அதிகரித்து 5 ஆயிரத்து 310 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது.

அணையில் இருந்து காவிரியில் 1500 கன அடி தண்ணீர் குடிநீருக்காக திறந்து விடப்பட்டுள்ளது. அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து மிக குறைந்த அளவே தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

நேற்று 105.58 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று மேலும் உயர்ந்து 105.80 அடியானது. இனி வரும் நாட்களில் நீர்வரத்து மேலும் அதிகரிக்கும் பட்சத்தில் மேட்டூர் அணை நீர்மட்டம் மேலும் வேகமாக உயர வாய்ப்புள்ளது. இதனால் காவிரி டெல்டா விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Tags:    

Similar News