தென்காசி அருகே கோழிப்பண்ணை உரிமையாளர் மகன் கொலையில் வாலிபர் கைது
தென்காசி:
தென்காசி அருகே உள்ள குத்துக்கல்வலசை புது கிணற்று தெருவை சேர்ந்தவர் குளத்தூரான். இவர் அய்யாபுரம் ரெயில்வே கேட் அருகே கோழிப்பண்ணை நடத்தி வருகிறார். இவரது மகன் மாரிச்செல்வம் (வயது 20). இவர் கோழிப்பண்ணையில் தனது தந்தைக்கு உதவியாக இருந்து வந்தார்.
இந்நிலையில் மாரிச்செல்வம் அய்யாபுரத்தில் உள்ள குளத்தின் கரையில் மோட்டார் சைக்கிளில் நேற்று சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த அய்யாபுரத்தை சேர்ந்த சரவணன் அரிவாளால் மாரிச்செல்வத்தை சரமாரியாக வெட்டினார். இதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். பின்னர் சரவணன் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டார்.
இது தொடர்பாக தென்காசி துணை போலீஸ் சூப்பிரண்டு மணிமாறன், இன்ஸ்பெக்டர் பாலமுருகன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி சரவணனை கைது செய்தனர். அவர் போலீசாரிடம் கூறியதாவது:-
நான் டிப்பர் லாரிகள் வைத்து உள்ளேன். நானும், மாரிச்செல்வமும் உறவினர்கள். கடந்த சில நாட்களுக்கு முன்பு மாரிச்செல்வம் குடிபோதையில் எனக்கு சொந்தமான ஒரு லாரியை அடித்து சேதப்படுத்தினார். இதனால் அவர் மீது ஆத்திரம் ஏற்பட்டது.
இந்நிலையில் நேற்று அய்யாபுரத்தில் உள்ள குளத்தின் கரையில் நான் நின்று கொண்டிருந்தேன். அங்கு மாரிச்செல்வம், மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது எனக்கும் மாரிச்செல்வத்துக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதில் ஆத்திரம் அடைந்த நான் அரிவாளால் மாரிச்செல்வத்தை வெட்டினேன். இதில் மாரிச்செல்வம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின்னர் நான் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டேன். ஆனால் போலீசார் என்னை கைது செய்துவிட்டனர்.
இவ்வாறு அவர் வாக்குமூலத்தில் கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.