சேலத்தில் 100 கிலோ கஞ்சா கடத்தி வந்த வாலிபர் கைது
சேலம்:
தமிழக காவல் துறை இயக்குனர் சைலேந்திரபாபு உத்தரவின்படி கஞ்சா வேட்டை 2.0 என்ற பெயரில் தமிழகம் முழுவதும் அதிரடியாக சோதனைகள் நடத்தப்பட்டு கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மதுரையில் இருந்து சேலத்திற்கு கஞ்சா விற்பனை செய்ய கடத்தி வருவதாக சேலம் போதை பொருள் நுண்ணறிவு பிரிவிற்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்பேரில் போதைப்பொருள் நுண்ணறிவு பிரிவு துணை கண்காணிப்பாளர் முரளி மற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிக்குமார், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சரவணன், செல்வம் மற்றும் தலைமை காவலர்கள் ரோஜா ராமன், சரவணன் ஆகியோர் கொண்ட குழுவினர் சேலம் சீலநாயக்கன்பட்டியிலிருந்து கொண்டலாம்பட்டி செல்லும் சாலையில் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக வேகமாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது வாகனத்தில் கடத்திவரப்பட்ட 100 கிலோ கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில் காரை ஓட்டிவந்தவர் மதுரை பெரியார் நகர் ஒத்தக்கடை பகுதியை சேர்ந்த அபினேஷ் என்பது தெரியவந்தது.
உடனே அவரை கைது செய்த போலீசார் அவர் கடத்தி வந்த 100 கிலோ கஞ்சா மற்றும் கார் உள்ளிட்டவைகளை பறிமுதல் செய்தனர். மேலும் இவ்வழக்கில் தொடர்புடைய தலைமறைவாக உள்ள 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர். சேலம் மாவட்டத்தில் போலீசாரின் கஞ்சா வேட்டை தொடர்வது கஞ்சா வியாபாரிகளிடையே கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.