தமிழ்நாடு
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

கண்ணனூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநாடு- மு.க.ஸ்டாலின் கேரளா சென்றார்

Published On 2022-04-09 08:30 GMT   |   Update On 2022-04-09 08:30 GMT
தேசிய அளவில் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையில் இந்த மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு காங்கிரஸ், தி.மு.க. உள்ளிட்ட பல்வேறு கட்சிகளுக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தலைவர்கள் அழைப்பு விடுத்து இருந்தனர்.

சென்னை:

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் 23-வது தேசிய மாநாடு கேரள மாநிலம் கண்ணனூரில் நடந்து வருகிறது. இந்த மாநாட்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

அதுமட்டுமின்றி தேசிய அளவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியை வலுப்படுத்துவதற்கான ஆலோசனையும் இந்த மாநாட்டில் மேற்கொள்ளப்படுகிறது. 2024-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலுக்கு பா.ஜனதாவை எதிர்த்து வலுவான கூட்டணியை அமைப்பது தொடர்பாகவும் ஆலோசிக்கப்படுகிறது.

தேசிய அளவில் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையில் இந்த மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு காங்கிரஸ், தி.மு.க. உள்ளிட்ட பல்வேறு கட்சிகளுக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தலைவர்கள் அழைப்பு விடுத்து இருந்தனர். அதை தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் ஏற்றுக் கொண்டார்.

இன்று மதியம் அவர் சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் கண்ணனூருக்கு புறப்பட்டார்.

மாநாட்டில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்றுகிறார். பா.ஜனதாவை எதிர்க்கும் வகையில் அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்று திரள அவர் அழைப்பு விடுக்கிறார்.

இதன்மூலம் தேசிய அரசியலில் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் முக்கிய சக்தியாக மு.க.ஸ்டாலின் முக்கியத்துவம் பெறுவது குறிப்பிடத்தக்கது. மத்திய, மாநில அரசுகளின் உறவுகள் தொடர்பாக நடக்கும் மாநாட்டில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கு பெறுவதால் தேசிய அளவில் அரசியல் நிபுணர்களின் பார்வை அவர் மீது திரும்பியுள்ளது.

கண்ணனூர் மாநாட்டில் பங்கேற்ற பிறகு இன்றே அவர் தனி விமானத்தில் சென்னை திரும்புகிறார். இன்று இரவு அவர் சென்னை வந்து சேருவார் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Tags:    

Similar News