தமிழ்நாடு
செம்பியத்தில் 8 மாத ஆண் குழந்தை ரூ.1½ லட்சத்துக்கு விற்பனை- தாய் உள்பட 3 பேர் கைது
செம்பியத்தில் 8 மாத ஆண் குழந்தை ரூ.1½ லட்சத்துக்கு விற்பனை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக தாய் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெரம்பூர்:
செம்பியம், அகரம் கண்ணபிரான் கோவில் தெருவை சேர்ந்தவர் மணிகண்டன்.
இவரது மனைவி உதயா. இவர்களது 8 மாத ஆண் குழந்தையை ரூ.1½ லட்சத்துக்கு விற்று விட்டதாக குழந்தைகள் நல குழுவுக்கு புகார்கள் வந்தன.
இது பற்றி விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கும்படி செம்பியம் போலீஸ் நிலையத்தில் குழந்தைகள் நலக்குழு உறுப்பினர் லலிதா புகார் அளித்தார்.
போலீசார் விசாரணை நடத்திய போது ஈரோட்டை சேர்ந்த குழந்தை இல்லாத தம்பதி ஒருவருக்கு குழந்தை விற்கப்பட்டு இருப்பது தெரிந்தது.
இதையடுத்து தனிப்படை போலீசார் ஈரோட்டுக்கு விரைந்து சென்று குழந்தையை மீட்டனர். அப்போது நடத்தப்பட்ட விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.
குழந்தை விற்பனையில் ஆலந்தூரை சேர்ந்த ஜான்சிராணி என்கிற ஆர்த்தி தரகராக செயல்பட்டது தெரியவந்தது.
ஈரோடு ஆர்சிட் காலனியை சேர்ந்த சவீதா என்பவருக்கு திருமணமாகி பல ஆண்டுகளாகியும் குழந்தை இல்லாததால் குழந்தையை தத்தெடுக்க முடிவு செய்து உள்ளார்.
இதை ஈரோட்டை சேர்ந்த கவிதா என்பவர் மூலம் தெரிந்து கொண்ட ஜான்சிராணி பின்னர் பேச்சுவார்த்தை நடத்தி உதயாவுக்கு பிறந்த 8 மாத ஆண் குழந்தையை ரூ.1½ லட்சத்துக்கு விற்றது தெரிய வந்தது.
இது தொடர்பாக குழந்தையின் தாய் உதயா, ஜான்சிராணி, சவீதா ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் இதில் தொடர்புடையவர்கள் மற்ற நபர்கள் குறித்தும் விசாரணை நடக்கிறது.