தமிழ்நாடு
அன்புமணி ராமதாஸ்

நெய்வேலி சுரங்கத்துக்காக நிலங்களை பறிப்பதா?: அன்புமணி ராமதாஸ் 27-ந்தேதி மக்களுடன் சந்திப்பு

Published On 2022-03-22 08:08 GMT   |   Update On 2022-03-22 08:08 GMT
என்.எல்.சி நிறுவனத்தால் பாதிக்கப்படும் மக்களைக் காப்பதற்கான இயக்கத்தின் முதல்கட்டமாக பாதிக்கப்பட்ட, பாதிக்கப்படக்கூடிய மக்களை நேரில் சந்தித்து, அவர்களின் கருத்துகளை அறிய முடிவு செய்து இருப்பதாக அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
சென்னை:

பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவன சுரங்கங்களின் விரிவாக்கம், புதிய சுரங்கங்கள் என்ற பெயரில் கடலூர் மாவட்ட மக்களின் நிலங்களை பறிக்கும் என்.எல்.சி நிறுவனத்தின் மனிதநேயமற்ற செயல்கள் தொடர்கின்றன. தொழில்மயம் என்ற பெயரில் பூர்வகுடிமக்களின் நிலங்களை பறித்து, வாழ்வாதாரங்களை அழித்து அவர்களை வீடற்ற நாடோடிகளாக மாற்றும் முயற்சியை பொறுத்துக்கொண்டிருக்க முடியாது.

என்.எல்.சி நிறுவனத்திற்காக இதுவரை 37,256 ஏக்கர் நிலம் கொடுத்த சுமார் 25,000 குடும்பங்களுக்கு போதிய இழப்பீடு வழங்கப்படவில்லை. அதுமட்டுமின்றி, 25,000 குடும்பங்களில் 1827 பேருக்கு மட்டும் தான் வேலைவாய்ப்பு வழங்கப்பட்டது.

நிலக்கரி சுரங்கங்களை அமைப்பதற்காக இதுவரை கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு, ஏக்கருக்கு முதலில் சில ஆயிரங்கள், அண்மைக்காலமாக சில லட்சங்கள் என்ற அளவில் தான் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது.

இப்போதும் கூட 3-வது நிலக்கரி சுரங்கத்திற்காக கையகப்படுத்தப்படவுள்ள விளை நிலங்களுக்கு மிகக் குறைந்த தொகையை இழப்பீடாக வழங்கப்படும் என்று என்.எல்.சி அறிவித்துள்ளது.

தங்கத்தைப் பறித்துக் கொண்டு, அதற்கு மாற்றாக பித்தளையைத் தருவது போன்ற இத்திட்டங்களை ஏற்றுக் கொள்ள முடியாது. 3-வது சுரங்கத்திற்காக நிலங்களை கையகப்படுத்தக்கூடாது.

இரண்டாம் சுரங்க விரிவாக்கத்திற்காக 25 கிராமங்களில் கையகப்படுத்தப்பட்ட 10,000 ஏக்கர் நிலங்களை திரும்ப ஒப்படைத்து விட்டு என்.எல்.சி நிறுவனம் வெளியேற வேண்டும் என்பது தான் கடலூர் மாவட்ட மக்களின் முழக்கமாக உள்ளது.

ஆயிரக்கணக்கான கோடிகளை இலாபமாக ஈட்டினாலும், உள்ளூர் மக்களின் நலனுக்காக என்.எல்.சி. எதுவும் செய்வதில்லை. அந்த நிறுவனத்தால் ஏற்படும் பாதிப்புகளை சரி செய்வதற்கான திட்டங்களைக் கூட செயல்படுத்துவதில்லை. இப்படிப்பட்டதொரு நிறுவனம் தேவையா? என்பதே மக்களின் வினாவாகும்.

நெய்வேலி முதல் இரு நிலக்கரி சுரங்க விரிவாக்கம்; மூன்றாவது நிலக்கரி சுரங்கம் ஆகியவை குறித்த மக்களின் கோரிக்கைகள், நிலைப்பாடுகளை மத்திய, மாநில அரசுகளுக்கு கொண்டு சென்று தீர்வு காணவும், அதற்காக கடுமையாக போராடவும் பா.ம.க. தயாராக இருக்கிறது.

என்.எல்.சி நிறுவனத்தால் பாதிக்கப்படும் மக்களைக் காப்பதற்கான இயக்கத்தின் முதல்கட்டமாக பாதிக்கப்பட்ட, பாதிக்கப்படக்கூடிய மக்களை நேரில் சந்தித்து, அவர்களின் கருத்துகளை அறிய முடிவு செய்திருக்கிறேன்.

அதற்காக கடலூர் மாவட்டம் புவனகிரி தொகுதி, கம்மாபுரம் ஒன்றியத்திற்குட்பட்ட சிறுவரப்பூர் கிராமத்தில் பா.ம.க. சார்பில் மக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வரும் 27-ந்தேதி ஞாயிற்றுக் கிழமை காலை 11.00 மணிக்கு இந்தக் கூட்டம் நடை பெறவிருக்கிறது. அதில் நான் பங்கேற்று மக்களின் கருத்துகளை அறிந்து கொள்ளவிருக்கிறேன்.

இந்தக் கூட்டத்தில் மக்கள் தெரிவிக்கும் கருத்துகளின் அடிப்படையில் அடுத்தக் கட்ட நடவடிக்கை குறித்து முடிவெடுக்கப்படும். இந்தக் கூட்டத்தில் தமிழ்நாடு உழவர் பேரியக்கம் உள்ளிட்ட பா.மக.வின் துணை அமைப்புகள் கலந்து கொள்ளும். பொதுமக்களும், வேளாண் பெருங்குடி மக்களும் பெருமளவில் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு தங்களின் கருத்துகளை தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
Tags:    

Similar News