தமிழ்நாடு
தற்கொலை செய்த மணி.

திருப்பூர் மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர் தற்கொலை

Published On 2022-02-25 07:44 GMT   |   Update On 2022-02-25 07:44 GMT
தேர்தலில் தோல்வியடைந்ததால் மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர் தற்கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர்:

திருப்பூர் கல்லூரி சாலை கொங்கணகிரி பகுதியை சேர்ந்தவர் மணி( வயது 55). மூட்டை தூக்கும் தொழிலாளியான இவர் மக்கள் நீதி மய்யம் கட்சியில் உறுப்பினராக இருந்து வந்தார்.

இந்தநிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின் போது திருப்பூர் மாநகராட்சி 36-வது வார்டில் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் போட்டியிட்டார். அப்போது தேர்தல் செலவுக்காக அக்கம்பக்கத்தினரிடம் ரூ.50 ஆயிரம் வரை கடன் வாங்கியுள்ளார். அந்த பணத்தை வைத்து தேர்தல் செலவு செய்துள்ளார்.

தேர்தல் முடிவு வெளியான போது அவர் 44 ஓட்டுகள் மட்டுமே வாங்கியிருந்தார். இதனால் அவர் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானார். நேற்றிரவு வீட்டில் ஆட்கள் இல்லாத போது திடீரென மணி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்த தகவல் அறிந்ததும் திருப்பூர் வடக்கு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தற்கொலை குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தேர்தலில் தோல்வியடைந்ததால் மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர் தற்கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Tags:    

Similar News