தமிழ்நாடு
கொரோனா வைரஸ்

கொரோனா பரிசோதனை ஆய்வகத்தில் பணியாற்றும் 80 சதவீத ஊழியர்களுக்கு கொரோனா

Published On 2022-01-27 03:46 GMT   |   Update On 2022-01-27 03:46 GMT
கோவை அரசு ஆஸ்பத்திரி மற்றும் இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் உள்ள ஆய்வகத்தில் பணியாற்றும் 80 சதவீத ஊழியர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
கோவை:

கோவை மாவட்டத்தில் 3-வது அலையாக கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் மற்றும் சுகாதாரத்துறை சார்பில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

தகுதி உள்ள அனைவரும் கட்டாயம் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும். முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். காய்ச்சல் அறிகுறிகள் இருந்தால் உடனடியாக கொரோனா பரிசோதனை மேற்கொண்டு தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என்பது உள்ளிட்ட விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்கள். மேலும் மாவட்டத்தில் பாதிப்பு அதிகமுள்ள பகுதிகளை கண்டறிந்து பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ஒரு நாளைக்கு மாவட்டம் முழுவதும் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாவட்டம் முழுவதும் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் நேற்று ஒரே நாளில் 3,740 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 98 ஆயிரத்து 929 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா பாதிப்பு காரணமாக அரசு, தனியார் ஆஸ்பத்திரிகள் மற்றும் கொரோனா சிகிச்சை மையங்களில் சிகிச்சை பெற்ற 2,884 பேர் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பினர். இதனால் மாவட்டத்தில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 69 ஆயிரத்து 324 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா தொற்று காரணமாக தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற 70 வயது முதியவர் மற்றும் 84 வயது முதியவர் என 2 பேர் சிகிச்சை பலனளிக்காமல் இறந்தனர். இதனால் மாவட்டத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 2,550 ஆக உயர்ந்துள்ளது. தற்போது அரசு, தனியார் ஆஸ்பத்திரிகள் மற்றும் கொரோனா சிகிச்சை மையங்களில் 27,037 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

மாவட்டம் முழுவதும் சேகரிக்கப்படும் சளி மாதிரிகள் பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரி மற்றும் இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் உள்ள கொரோனா பரிசோதனை மையங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. அங்கு ஆய்வக ஊழியர்கள் சளி மாதிரிகளை பரிசோதனை செய்து வருகின்றனர்.

தற்போது இந்த ஆய்வகங்களில் பணியாற்றும் ஊழியர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

கோவை அரசு ஆஸ்பத்திரி மற்றும் இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் உள்ள ஆய்வகத்தில் பணியாற்றும் 80 சதவீத ஊழியர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

கொரோனா முதல் அலையின் போது தற்காலிக அடிப்படையில் 50-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர். அவர்கள் மூலமாக தற்போது பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News