தமிழ்நாடு
ஏழை மாணவர்களுக்கு கல்வி கடன் - வங்கிகளுக்கு தமிழக அரசு வலியுறுத்தல்
ஏ.டி.எம்.படிவங்களில் தமிழ் பயன்படுத்தப்பட வேண்டும் என்று தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வலியுறுத்தி உள்ளார்.
சென்னை:
சென்னை தலைமைச் செயலகத்தில் மாநில வங்கியாளர் குழுவின் சிறப்புக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு தலைமை வகித்து மாநில நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாவது :
முன்னுரிமை துறைகளுக்கு கடன் வழங்கும் திட்டங்களை முனைப்பாக செயல்படுத்த வேண்டும். குறிப்பாக ஏழை எளிய மாணவர்களுக்கு கல்விக்கடன் வழங்கி உதவிட வேண்டும். தொலைத் தூர பகுதிகளில் உள்ள பழங்குடியின பகுதிகளில் வங்கி வசதிகள் வழங்க வேண்டும். ஏடிஎம் படிவங்களில் தமிழ் பயன்படுத்தப்பட வேண்டும். வங்கியின் உதவி மையங்கள் மற்றும் பொது மக்கள் தொடர்பில் இருக்கும் அலுவலர்கள் தமிழ் அறிந்திருக்க வேண்டும். இவ்வாறு தமிழக நிதியமைச்சர் தமது பேச்சின் போது குறிப்பிட்டார்.
நிதித்துறை அரசு கூடுதல் தலைமைச் செயலர் நா.முருகானந்தம், மாநில அளவிலான வங்கியாளர் குழுத் தலைவர் பார்த்தா ப்ரதிம் சென்குப்தா உள்பட பலர் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.