தமிழ்நாடு
குடோனில் பயங்கர தீ விபத்து - ரூ.50 லட்சம் பனியன் துணிகள் எரிந்து நாசம்
இன்று முழு ஊரடங்கு என்பதால் நேற்று இரவு வேலையை முடித்துவிட்டு தொழிலாளர்கள் குடோனை மூடிவிட்டு வீட்டிற்கு சென்றனர்.
ஊத்துக்குளி:
திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி அடுத்த சேடர்பாளையத்தை சேர்ந்தவர் திருமூர்த்தி. இவர் அதே பகுதியில் வேஸ்ட் குடோன் வைத்து நடத்தி வருகிறார். இங்கு ஏராளமான வடமாநில தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இன்று முழு ஊரடங்கு என்பதால் நேற்று இரவு வேலையை முடித்துவிட்டு தொழிலாளர்கள் குடோனை மூடிவிட்டு வீட்டிற்கு சென்றனர்.இந்தநிலையில் நள்ளிரவு 1 மணி அளவில் குடோனில் இருந்து கரும்புகை வெளியேறி உள்ளது. சற்று நேரத்தில் குடோன் முழுவதும் தீ கொளுந்துவிட்டு எரிந்தது.
இதனைப் பார்த்து அக்கம்பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக குடோன் உரிமையாளர் திருமூர்த்திக்கும்,திருப்பூர் வடக்கு தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் தெரிவித்தனர்.
வடக்கு தீயணைப்பு நிலைய அதிகாரி பாஸ்கரன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் 3 வாகனங்களில் சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.குடோன் முழுவதும் வேஸ்ட் துணிகள் அதிகம் இருந்ததால் தீயை அணைப்பதில் தீயணைப்பு வீரர்களுக்கு சவாலாக இருந்தது.குடோன் முழுவதும் தீ கொளுந்துவிட்டு எரிந்ததால் இரவு 1மணி முதல் இன்று காலை வரை தீயை அணைக்க போராடி வருகின்றனர்.
இந்த தீ விபத்தில் குடோனில் இருந்த ரூ.50 லட்சத்திற்கும் மேலான வேஸ்ட் துணிகள் எரிந்து நாசமானது. தீ விபத்துக்கான காரணம் குறித்து ஊத்துக்குளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.