தமிழ்நாடு
சென்னை உயர்நீதிமன்றம்

பொது இடங்களில் சிலை வைக்க எந்த அனுமதியும் வழங்கப்படவில்லை - தமிழக அரசு உறுதி

Published On 2022-01-22 19:58 GMT   |   Update On 2022-01-22 19:58 GMT
உச்சநீதிமன்ற தீர்ப்பு அடிப்படையில் சிலைகள் அமைக்க அனுமதி அளிக்கப்படுவதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
சென்னை:

சென்னை உயர்நீதிமன்றத்தில் கோவையை சேர்ந்த லோகநாதன் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், கோவை அவினாசி சாலை சந்திப்பில் முறையான அனுமதியுடன் அண்ணாவின் சிலை வைக்கப்பட்டுள்ளது. இந்த சிலை உள்ள பீடத்தை அகலப்படுத்தி அனுமதி இல்லாமல், மறைந்த முதலமைச்சர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரது சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. அவற்றை அகற்ற உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார். 

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிம்ன்றம், அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள சிலைகளை அகற்றுவது தொடர்பாக ஏற்கனவே உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளை அமல்படுத்த எடுத்த நடவடிக்கைகள் குறித்து விரிவான பதில் மனுவை தாக்கல் செய்ய தமிழக தலைமைச்செயலாளருக்கு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி தலைமைச்செயலாளர் இறையன்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் கூறியிருப்பதாவது:-

உச்சநீதிமன்றத்தின் உத்தரவின் அடிப்படையில் சிலைகள் அமைக்க அனுமதி கோரும் விண்ணப்பங்களை பரிசீலித்து அனுமதி வழங்கும் வகையில் கடந்த 2017-ம் ஆண்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.  இந்த அரசாணையின் அடிப்படையில், வருவாய்த்துறை கூடுதல் தலைமைச்செயலாளர் மற்றும் வருவாய் நிர்வாக ஆணையர் மாவட்ட கலெக்டர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், அரசு நிலங்கள், நீர்நிலைகள், சாலைகள், புராதன சின்னங்கள் அமைந்துள்ள இடங்களில் சிலைகள் அமைக்கப்பட்டுள்ளனவா என்பதை ஆய்வு செய்து அறிக்கை அளிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

சிலைகள் அமைக்கப்படுவதால் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படுமா என்பது குறித்து ஒவ்வொரு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் இருந்தும் அறிக்கை பெற வேண்டும். பட்டா நிலங்களில் அமைக்கப்படும் சிலைகளை பராமரிப்பதற்கான செலவை, சிலை அமைப்பவர்கள் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கு செலுத்த வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சட்டம்-ஒழுங்கு பிரச்சினை, உள்ளாட்சி அமைப்புகளின் அனுமதி, நெடுஞ்சாலைத்துறை ஒப்புதல் மற்றும் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு ஆகியவற்றின் அடிப்படையில் சிலைகள் அமைக்க அனுமதி அளிக்கப்படுகிறது. சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுக்கு முரணாக தமிழகத்தில் பொது இடங்களில் சிலைகள் வைக்க எந்த அனுமதியும் வழங்கப்படவில்லை.  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 
Tags:    

Similar News