தமிழ்நாடு
ஏற்காட்டுக்கு சுற்றுலா பயணிகள் வருகை குறைந்தது
கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக ஏற்காட்டுக்கு சுற்றுலா பயணிகள் வருகை குறைந்துள்ளது.
ஏற்காடு:
ஏழைகளின் ஊட்டி எனப்படும் ஏற்காட்டுக்கு தினசரி சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். வார இறுதி நாட்களில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாக இருக்கும்.
குறிப்பாக வெள்ளிக்கிழமை ஏற்காட்டுக்கு வரும் சுற்றுலா பயணிகள் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் அங்கு தங்கி முக்கிய இடங்களை பார்த்து ரசிப்பார்கள். தொடர் விடுமுறை நாட்களில் வழக்கத்தை விட அதிகளவில் வருவார்கள்.
கடந்த 2 வாரமாக ஊரடங்கு கட்டுப்பாடுகள் காரணமாக சுற்றுலா பயணிகள் வருகை கணிசமாக குறைந்துவிட்டது. ஏற்காட்டில் உள்ள ஏரி, பூங்காக்கள், லேடீஸ் சீட், ஜென்ஸ் சீட், பக்கோடா பாயிண்ட் உள்ளிட்ட இடங்கள் வெறிச்சோடி காணப்படுகின்றன.
குறிப்பாக ஏரிக்கரை வெறிச்சோடி காணப்படுகிறது. படகுகள் குழாமில் நிறுத்தப்பட்டு உள்ளன. சுற்றுலா பயணிகள் வராததால் சாலை ஓர வியாபாரிகள் மற்றும் பெரிய கடைக்காரர்கள், விடுதி உரிமையாளர்கள், வாடகை கார் வைத்திருப்போர் பாதிக்கப்பட்டனர்.