தமிழ்நாடு
.

இன்ஸ்டாகிராம் மூலம் இணைந்த காதல் ஜோடி

Published On 2022-01-21 08:10 GMT   |   Update On 2022-01-21 08:10 GMT
சேலத்தில் இன்ஸ்டாகிராம் மூலம் இணைந்த காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர்.
அன்னதானப்பட்டி:

 சேலம் சீலநாயக்கன்பட்டி நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஹரிகரன் ( வயது 24). இவர் பி.காம் (சி.ஏ.) படித்து விட்டு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். விருதுநகர் மாவட்டம் சிவகாசி சாமிபுரம் காலனி பகுதியைச் சேர்ந்தவர் அபிராமி (20). பி.எஸ்சி. ( மைக்ரோ பயாலஜி)  2&ம் ஆண்டு படித்து வருகிறார். 

இந்த நிலையில் ஹரிகரனுக்கும், அபிராமிக்கும் கடந்த 3 மாதங்களாக 'இன்ஸ்டாகிராம்' மூலம் தொடர்பு ஏற்பட்டது.  இருவருக்கும் இடையே ஏற்பட்ட இந்த பழக்கம் நாளடைவில்  காதலாக மாறியது. தொடர்ந்து இருவரும் தீவிரமாக காதலித்து வந்துள்ளனர். 

இவர்களது காதல் விவகாரம்  வெளியே தெரிய வர இருதரப்பு வீட்டிலும் கடும் எதிர்ப்புக் கிளம்பியது. இதைத் தொடர்ந்து இருவரும்  வீட்டை  விட்டு வெளியேறி திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். கடந்த 19&ந் தேதி இருவரும் சேர்ந்து திண்டுக்கல் அருகே ஒரு ஊரில் உள்ள  அம்மன் கோவிலில் வைத்து தாலி கட்டி திருமணம் செய்து கொண்டனர்.  

தொடர்ந்து பாதுகாப்பு கேட்டு சிவகாசியில் உள்ள போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர்.  அவர்கள் அளித்த புகாரின் பேரில் சிவகாசி போலீசார் விசாரித்து வந்தனர்.  இதைத் தொடர்ந்து காதலர்கள் இருவரும் இன்று  காலை பாதுகாப்பு கேட்டு அன்னதானப்பட்டி போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர்.  

காதலர்கள் இருவரும் மேஜர் என்பதால் அவர்களின் பெற்றோரை அழைத்து சமாதானம் செய்து  காதல் ஜோடியை  போலீசார் அனுப்பி வைத்தனர்.
Tags:    

Similar News