தமிழ்நாடு
சாலைகளை சீரமைக்க நிதி ஒதுக்கீடு- நெடுஞ்சாலைத் துறை அமைச்சரிடம் விஜய் வசந்த் எம்.பி. வேண்டுகோள்
தேங்காப்பட்டணம் -அரையன்தோப்பு - முள்ளூர்துறை சாலையும் கடலரிப்பால் முற்றிலுமாக சேதமடைந்து கடந்த 15 ஆண்டுகளாக போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி:
கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் எம்.பி. மற்றும் கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜேஷ் குமார் ஆகியோர், தமிழக நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ. வேலுவை சந்தித்தனர். அப்போது, கடலரிப்பால் பாதிப்படைந்த கடலோர சாலைகளை செப்பனிடுமாறு கோரிக்கை வைத்தனர். இது தொடர்பான மனுவைவும் அமைச்சரிடம் வழங்கினர்.
கிள்ளியூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, மாவட்ட இதர சாலைகளான நீரோடி - இரையுமன்துறை சாலையில் வள்ளவிளை - எடப்பாடு - இரவிபுத்தன்துறை பகுதிகளில் சாலை கடலரிப்பால் முற்றிலுமாக சேதமடைந்து கடந்த 20 -ஆண்டுகளாக துண்டிக்கப்பட்டு போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. இதேபோல் தேங்காப்பட்டணம் -அரையன்தோப்பு - முள்ளூர்துறை சாலையும் கடலரிப்பால் முற்றிலுமாக சேதமடைந்து கடந்த 15 ஆண்டுகளாக போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.
இதனால் இப்பகுதிகளில் உள்ள மக்கள் மருத்துவமனைகளுக்கு செல்லவும், மாணவ மாணவிகள் பள்ளி கல்லூரிகளுக்கு செல்லவும், மீன்பிடி தொழிலாளர்கள் தேங்காப்பட்டணம் துறைமுகத்திற்கு செல்லவும் நீண்ட தொலை தூரம் சுற்றி செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால் இந்த பகுதிகளில் உள்ள மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர்.
எனவே, மக்களின் நலன்கருதி மேற்கூறிய இரண்டு சாலைகளையும் சீரமைக்க, கடலரிப்பு தடுப்பு சுவர்கள் மற்றும் தூண்டில் வளைவுகள் அமைத்து சாலைகளை சீரமைக்க வருகிற பட்ஜெட் கூட்டத்தொடரில் நிதி ஒதுக்கீடு செய்யுமாறு அமைச்சரிடம் கேட்டுக் கொண்டனர்.