தமிழ்நாடு
காஷ்மீரில் இருந்து கன்னியாகுமரிக்கு சைக்கிள் பயணம் மேற்கொண்ட சிறுமி

காஷ்மீரில் இருந்து கன்னியாகுமரிக்கு 10 வயது சிறுமி சைக்கிள் பயணம்

Published On 2022-01-21 06:15 GMT   |   Update On 2022-01-21 06:15 GMT
சுற்றுச்சூழல் விழிப்புணர்வு, பெண்கள் பாதுகாப்பை வலியுறுத்தி, காஷ்மீரில் இருந்து கன்னியாகுமரிக்கு தனது சைக்கிள் பயணத்தை தொடங்கிய 10 வயது சிறுமி கன்னியாகுமரி வந்தடைந்தார்.
கன்னியாகுமரி:

மகாராஷ்டிரா மாநிலம், தானே பகுதியைச் சேர்ந்தவர் ஆசிஸ் பாட்டீல். இவரது மகள் ஜல்பரி சாயி (வயது 10). இவர் அங்குள்ள ஒரு பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வருகிறார். இவர், சுற்றுச்சூழல் விழிப்புணர்வு மற்றும் பெண்கள் பாதுகாப்பை வலியுறுத்தி, காஷ்மீரில் இருந்து கடந்த மாதம் 12-ந்தேதி தனது சைக்கிள் பயணத்தை தொடங்கினார். அரியானா, பஞ்சாப், ராஜஸ்தான், குஜராத், மகாராஷ்டிரா, கர்நாடகா ஆகிய மாநிலங்கள் வழியாக தமிழகத்தை அடைந்த அவர், ஓசூர், சேலம், மதுரை, நெல்லை மாவட்டம் வழியாக 3 ஆயிரத்து 615 கி.மீ.தூரம் பயணம் செய்து நேற்று கன்னியாகுமரி வந்தடைந்தார்.

அங்குள்ள ராஜீவ் காந்தி சிலை முன்பு பயணத்தை அவர் நிறைவு செய்தார். தனது இலக்கு குறித்து நிருபர்களிடம் கூறுகையில், சுற்றுச்சூழலை பேணிக்காப்பதும், பெண்கள் பாதுகாப்புடன் வாழ வேண்டும் என்பதுமே எனது குறிக்கோள். அதை எனது சைக்கிள் பயணத்தில் வலியுறுத்தியபடி வந்துள்ளேன் என்றார்.

Tags:    

Similar News