தமிழ்நாடு
முக கவசம்

சென்னையில் நேற்று ஒரே நாளில் முக கவசம் அணியாத 5,666 பேர் மீது வழக்கு

Published On 2022-01-18 07:16 GMT   |   Update On 2022-01-18 07:16 GMT
முககவசம் அணியாதது தொடர்பாக 5,666 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு ரூ.11 லட்சத்து 33 ஆயிரத்து 200 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

சென்னை:

கொரோனா பரவலை கட்டுப்படுத்த இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக் கிழமை ஊரடங்கு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

சென்னையில் அத்தியாவசியத் தேவையின்றி வாகனங்களில் செல்பவர்களை தடுக்க 312 வாகன தணிக்கை சாவடிகள் அமைக்கப்பட்டு 10 ஆயிரம் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.

நேற்று இரவு 10 மணி முதல் இன்று காலை 5 மணிவரை இரவு நேர ஊரடங்கில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை மீறியது தொடர்பாக 95 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அத்தியாவசியத் தேவையின்றி வெளியில் சுற்றியவர்களிடம் இருந்து 175 மோட்டார் சைக்கிள்கள், 9 ஆட்டோ மற்றும் ஒரு கார் என மொத்தம் 185 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு இருக்கிறது.

மேலும் முககவசம் அணியாதது தொடர்பாக 5,666 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு ரூ.11 லட்சத்து 33 ஆயிரத்து 200 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. இதுபோல் சமூக இடைவெளி கடைபிடிக்காதது தொடர்பாக 22 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ரூ.11 ஆயிரம் வசூலிக்கப்பட்டது. மதுபோதையில் வாகனம் ஓட்டியது தொடர்பாக 2 மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு நேரங்களில் அரசு அறிவித்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி அத்தியவசியத் தேவையின்றி பொது மக்கள் வெளியில் வருவதை தவிர்க்க வேண்டும் என்று போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News