தமிழ்நாடு
ஆத்தூர் கூலமேட்டில் நாளை நடக்க உள்ள ஜல்லிக்கட்டில் பங்கேற்க 650 காளைகளின் உரிமையாளர், 500 காளையர்கள் பதிவு செய்துள்ளனர்.
ஆத்தூர்:
பொங்கல் பண்டிகையையொட்டி, சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே கூலமேட்டில், நாளை (திங்கட்கிழமை) ஜல்லிக்கட்டு நடக்கிறது. அதற்காக மைதானம், வாடிவாசல், மருத்துவ பரிசோதனை மையம், தடுப்புகள் உள்ளிட்ட வசதிகள் குறித்து, அரசுத்துறை அலுவலர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.
ஜல்லிக்கட்டில் பங்கேற்க, சேலம், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, நாமக்கல், மதுரை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து, 650 காளைகளின் உரிமையாளர்கள், 500 மாடுபிடி வீரர்கள் பதிவு செய்துள்ளனர்.
தற்போது கொரோனா தொற்று அதிக அளவில் பரவி வருவதால் பார்வையாளர்கள் அதிக அளவில் கூடாத வண்ணம் இருக்க 1,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளைமாடுகள் பரிசோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படும்.
இதே போல மாடுபிடி வீரர்களை உடல்தகுதி பரிசோதனை, கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் இருந்தால் மட்டுமே போட்டியில் பங்கேற்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஜல்லிக்கட்டு நடைபெறும் கூலமேடு கிராமத்தில் மாவட்ட கலெக்டர் கார்மேகம், போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீ அபினவ் மற்றும் வருவாய்த்துறையினர், கால்நடை துறையினர், நெடுஞ்சாலைத்துறையினர் முன்னேற்பாடு பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.