தமிழ்நாடு
தற்கொலை

திருச்சி அருகே உறவினர் வீட்டில் காதலர்கள் தற்கொலை முயற்சி: காதலன் பலி

Published On 2021-12-26 07:16 GMT   |   Update On 2021-12-26 07:16 GMT
திருச்சி அருகே காதலர்கள் தற்கொலை முயற்சியில் காதலன் பலியானார். காதலிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மண்ணச்சநல்லூர்

புதுக்கோட்டை மாவட்டம், மாலையீடு சண்முகா நகர் பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ் மகன் வினித் (வயது 28). இவர் புதுக்கோட்டையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணி புரிந்து வந்தார். மதுரை மாவட்டம், பொன்மேனி பைபாஸ் ரோடு பகுதியை சேர்ந்தவர் உமா பதியின் மகள் நிவேதா (25).

வினித், நிவேதா இருவரும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இந்த நிலையில் நேற்று மாலை வினித் தனது காதலி நிவேதாவை அழைத்துக் கொண்டு மண்ணச்சநல்லூர் இந்திரா நகர் 7-வது குறுக்குதெருவில் உள்ள தனது பெரியம்மா வீட்டிற்கு வந்திருந்தார்.

இரவு சாப்பிட்டு விட்டு காதலர்கள் மாடியில் உள்ள அறைக்கு சென்றனர். நீண்ட நேரம் ஆகியும் அவர்கள் கீழே இறங்கி வரவில்லை. இதையடுத்து வினித்தின் பெரியம்மாவும் தூங்கி விட்டார். இன்று காலை பொழுது விடிந்தும் அவர்கள் வராததால் சந்தேகம் அடைந்த வினித்தின் பெரியம்மா, மாடி அறைக்கு சென்று பார்த்தார்.

அப்போது வினித் போர்வையை கழுத்தில் கட்டி மின் விசிறியில் தூக்கில் பிணமாக தொங்கினார். நிவேதா கழுத்து மற்றும் கையில் கண்ணாடியால் கிழிக்கப்பட்டு ரத்தம் வடிந்த நிலையில் மயங்கி கிடந்தார்.

இதனால் அதிர்ச்சியடைந்த அவர் மண்ணச்சநல்லூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். அதன் பேரில் விரைந்து வந்த போலீசார் வினித்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கும், உயிருக்கு போராடிக்கொண்டிருந்த நிவேதாவை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கும் அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து மண்ணச்சநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து காதலர்கள் தற்கொலை முயற்சிக்கு காரணம் என்ன, எதிர்ப்பு கிளம்பியதால் அவர்கள் இந்த முடிவை எடுத்தார்களா? என்று விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதயில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
Tags:    

Similar News