தமிழ்நாடு
மெட்ரோ ரெயில்

புரசைவாக்கம் நெடுஞ்சாலையில் ஒரு வழிப்பாதை: ராட்சத எந்திரங்கள் மூலம் சுரங்கம் தோண்டும் பணிகள் தீவிரம்

Published On 2021-12-22 23:22 GMT   |   Update On 2021-12-22 23:22 GMT
புரசைவாக்கம் நெடுஞ்சாலையில் ஒரு வழிப்பாதையாக மாற்றம் செய்யப்பட்டுள்ள பகுதியில் மெட்ரோ ரெயில் பாதைக்காக ராட்சத எந்திரம் மூலம் சுரங்கம் தோண்டும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
சென்னை:

சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க சென்னை விமானநிலையம்-விம்கோநகர் மற்றும் சென்டிரல்-பரங்கிமலை இடையே 55 கிலோ மீட்டர் தூரத்துக்கு மெட்ரோ ரெயில் இயக்கப்பட்டு வருகின்றன. 2-வது கட்டமாக 3 வழித்தடங்களில் மெட்ரோ ரெயில் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மாதவரம்-சிறுசேரி, மாதவரம்-சோழிங்கநல்லூர், கலங்கரைவிளக்கம்- பூந்தமல்லி என 118 கிலோ மீட்டர் தூரத்துக்கு இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

இதில் மாதவரம்-சோழிங்கநல்லூர் வழித்தடத்தில் புரசைவாக்கத்தில் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. குறிப்பாக புரசைவாக்கம் நெடுஞ்சாலை ஒருவழிப்பாதையாக மாற்றம் செய்யப்பட்டு, புரசைவாக்கம் பி.எஸ்.என்.எல். அலுவலக சிக்னலில் இருந்து கெல்லீஸ் சாலை வரை ஒருவழிப்பாதையாக்கப்பட்டுள்ளது. இதற்காக சாலையின் ஒரு பகுதி முழுவதும் மெட்ரோ நிறுவனம் சார்பில் தடுப்புகள் அமைக்கப்பட்டு உள்ளது. வாகனங்கள் ஒருவழிப்பாதையில் சென்று வருகின்றன. கெல்லீஸ் சாலை வழியாக புரசைவாக்கத்தை நோக்கி வரும் வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளன.

கெல்லீஸ் சாலை வழியாக வரும் வாகனங்கள் நாகப்பா சாலை, பெயின் ஸ்கூல் வழியாக புரசைவாக்கத்தை சென்றடைகின்றன. புரசைவாக்கம் பி.எஸ்.என்.எல். சிக்னல் அருகே 2-ம் கட்ட மெட்ரோ ரெயில் பணிகளுக்காக ராட்சத கிரேன்கள் மற்றும் ராட்சத எந்திரங்கள் மூலம் சுரங்கம் தோண்டும் பணியில் மெட்ரோ ரெயில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த பணிகளின் முன்னேற்றத்தை தொடர்ந்து புரசைவாக்கம் பி.எஸ்.என்.எல். அலுவலக ஜங்கசனில் இருந்து டவுட்டன் பாலம் வரை பணிகளை தொடங்க அதிகாரிகள் திட்டமிட்டு உள்ளனர்.

இந்த பகுதியில் போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்படாமல் இருப்பதுடன், குடியிருப்புகள் மற்றும் வணிக நிறுவனங்கள் அதிகம் இருப்பதால் திட்டமிட்ட காலத்தில் பணிகளை முடிக்க அதிகாரிகள் திட்டமிட்டு உள்ளனர்.

இந்த 2-ம் கட்ட மெட்ரோ ரெயில் வழித்தட பணிகள் 2026-ம் ஆண்டு நிறைவு செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன் பின்னர் மெட்ரோ ரெயில் போக்குவரத்தை தொடங்க சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் முடிவு செய்து உள்ளது. 2-ம் கட்ட மெட்ரோ ரெயில் திட்ட பணிகள் முடிக்கப்பட்டால், வட சென்னையில் இருப்பவர்கள் தென் சென்னைக்கும், தென் சென்னையில் இருப்பவர்கள் வட சென்னைக்கும், போக்குவரத்து நெரிசலின்றி எளிதாக செல்ல முடியும்.
Tags:    

Similar News