தமிழ்நாடு
ஓ பன்னீர்செல்வம்

அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்திருந்தால் அகவிலைப்படி வழங்கி இருப்போம் - ஓ.பன்னீர்செல்வம்

Published On 2021-12-22 06:12 GMT   |   Update On 2021-12-22 06:16 GMT
தமிழ்நாடு அரசின் வருவாயைப் பெருக்குவதிலோ, சீர்திருத்தங்களை மேற்கொள்வதிலோ, சிக்கனத்தைக் கடைபிடிப்பதிலோ எந்த நடவடிக்கையும் தி.மு.க. அரசு எடுத்ததாக தெரியவில்லை என ஓ பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
சென்னை:

அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

புதிய ஓய்வூதியத் திட்டம் கைவிடப்பட்டு பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் நடைமுறைக்கு கொண்டு வரப்படும்” என்று தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருந்தது. ஆனால் ஆட்சிக்கு வந்தவுடன் மத்திய அரசு அறிவித்த அகவிலைப்படியைக் கூட ஒழுங்காகத் தர இயலாத திறமையற்ற அரசாக தி.மு.க. விளங்கிக் கொண்டிருக்கிறது. என்ன ஏமாற்று வேலை.

மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் மாநில அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தி அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் 1988-ம் ஆண்டு போராட்டம் நடத்தியபோது ரூ. 70 இடைக்கால நிவாரணம் கவர்னர் ஆட்சிக் காலத்தில் அளிக்கப்பட்டது.

1989-ம் ஆண்டு தி.மு.க. அரசு பொறுப்பேற்றப் பிறகு ஊதியக்குழு பரிந்துரைகள் அமல்படுத்தப்பட்டன. அப்போது குறைந்தபட்ச ஊதிய உயர்வு வெறும் ரூ.100தான். கவர்னர் ஆட்சிக்காலத்தில் அளிக்கப்பட்ட இடைக்கால நிவாரணமான ரூ.70-ஐ கழித்து விட்டால் நிகர ஊதிய உயர்வு வெறும் ரூ.30தான்.

அப்போது நடைபெற்ற அரசு ஊழியர்கள் மாநாட்டில் பேசிய அப்போதைய முதல்- அமைச்சர், “கவர்னர் பேனா கொடுத்தார். அதை மூடிபோட்டு மூடினேன்” என்றார். அவர் பாணியில் சொல்ல வேண்டுமென்றால், அ.தி.மு.க. கொடுத்து சென்ற மூடியுடன் கூடிய பேனாவை முக்காலாக்கி விட்டார். அதாவது மூடியை எடுத்து விட்டார் முதல்-அமைச்சர்.

கொரோனா காலகட்டத்தில் மத்திய, மாநில அரசுகளின் வருவாய் கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில், மத்திய அரசின் நடவடிக்கைக்கு ஏற்ப, அரசு ஊழியர்களின் அகவிலைப்படியையும், ஈட்டிய விடுப்பிற்கு பதில் ஊதியம் பெறும் உரிமையையும் ரத்து செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்த அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர், இப்போது அதைவிட பன்மடங்கு கூடுதல் வருமானம் வருகின்ற இந்த காலகட்டத்தில் மத்திய அரசு அறிவித்த அக விலைப்படியை கூட அளிக்க தயக்கம் காட்டுவது நகைப்புக் குரியதாக உள்ளது.

தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்றதும், மாநில பொருளாதாரத்திற்கு புத்துணர்ச்சி அளிக்கும் வகையில், மிகச்சிறந்த பொருளாதார நிபுணர்களைக் கொண்ட ‘முதல்-அமைச்சரின் பொருளாதார ஆலோசனைக்குழு’ ஒன்று அமைக்கப்பட்டது. மாநில வளர்ச்சிக் கொள்கை குழுவுக்கு துணைத் தலைவரையும், உறுப்பினர்களையும் தி.மு.க. அரசு ஆட்சிக்கு வந்தவுடன் நியமித்தது. ஆனால் இந்த குழுக்களின் கூட்டங்கள் கூட்டப்பட்டதா? என்பது குறித்தும், பரிந்துரைகள் அளிக்கப்பட்டதா என்பது குறித்தும், இதுவரை எந்த தகவலும் இல்லை.



கொரோனா பெருந்தொற்று நோயின் தாக்கம் முடிந்தவுடன் தமிழகத்தின் கடன் சுமை தாமதமின்றி சரி செய்யப்படுவதை உறுதி செய்வதற்கான முக்கிய சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் என்று நிதிநிலை அறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

தற்போது கொரோனா பெருந்தொற்று கணிசமாக குறைந்து பள்ளிகள் எல்லாம் திறந்துள்ள சூழ்நிலையில் தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்று 2-வது கவர்னர் உரை சமர்ப்பிப்பதற்கான தேதி குறிப்பிட்டுள்ள நிலையில், சீர்திருத்தப்பணிகள் தொடங்கப்பட்டு விட்டனவா? என்பது குறித்தும் தகவல் இல்லை.

தமிழ்நாடு அரசின் வருவாயைப் பெருக்குவதிலோ, சீர்திருத்தங்களை மேற்கொள்வதிலோ, சிக்கனத்தைக் கடைபிடிப்பதிலோ எந்த நடவடிக்கையும் தி.மு.க. அரசு எடுத்ததாக தெரியவில்லை. மொத்தத்தில் ஒரு திறமையற்ற அரசாக காணப்படுகிறது. உண்மை நிலை இவ்வாறிருக்க, அ.தி.மு.க. ஆட்சி மீது வீண் பழி போடுவதை யாரும் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள்.

மத்திய அரசிடமிருந்து நமக்கு வரவேண்டிய வருவாய் மற்றும் நிவாரணத்தை பொறுத்தவரையில், தொடர்புடைய மத்திய அமைச்சர்களுடன் அடிக்கடி தொலைபேசியில் தொடர்பு கொண்டு வலியுறுத்துவதும், தேவையான அழுத்தத்தைக் கொடுப்பதும், தி.மு.க.வைச் சேர்ந்த 34 மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்களை டெல்லிக்கு அனுப்பி வற்புறுத்தச் சொல்வதும், அதன் வாயிலாக வருவாயைப் பெறுவதும்தான் நிர்வாகத் திறமைக்கு எடுத்துக்காட்டு.

இதுபோன்ற ஆக்கப்பூர்வமான பணிகளில் தி.மு.க. அரசு கவனம் செலுத்தாமல் அ.தி.மு.க.வை குறைசொல்வது பொறுப்பை தட்டிக் கழிப்பதற்கு சமம்.

அ.தி.மு.க. அரசு 3-வது முறையாக தொடர்ந்து ஆட்சிக்கு வந்திருந்தால், திறமையோடு செயல்பட்டு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படியை நிச்சயம் வழங்கி இருக்கும். அரசு ஊழியர்களின் நண்பன் யார் என்பதை இனிமேலாவது அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும், ஓய்வூதியதாரர்களும் புரிந்து கொள்வார்கள்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News