அம்பத்தூரில் ரெயில் முன் பாய்ந்து காதல் ஜோடி தற்கொலை
அம்பத்தூர்:
அம்பத்தூர் ரெயில் நிலையத்தில் உள்ள எக்ஸ்பிரஸ் தண்டவாளம் அருகே இன்று காலை 11 மணி அளவில் ஒரு இளம்பெண்ணும், வாலிபரும் உடல் சிதைந்த நிலையில் இறந்து கிடந்தனர்.
இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த ரெயில் நிலையத்துக்கு வந்த பயணிகள் ஆவடி ரெயில்வே போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.
போலீசார் விரைந்து வந்து பலியான 2 பேரின் உடல்களையும் கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அருகில் கிடந்த அவர்களது பையில் இருந்த அடையாள அட்டைகளை வைத்து இறந்துபோனது திருவண்ணாமலையை சேர்ந்த ஜெயக்குமார் (வயது22) ஆந்திரா மாநிலத்தை சேர்ந்த சரண்யா (21) என்பது தெரிந்தது.
அவர்கள் காதல் ஜோடிகளாக இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். அம்பத்தூர் ரெயில் நிலையத்துக்கு வந்த அவர்கள் எக்ஸ்பிரஸ் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்திருப்பது விசாரணையில் தெரிய வந்தது.
அவர்களின் தற்கொலை முடிவுக்கான காரணம் என்ன என்பது குறித்து போலீசார் மேலும் விசாரித்து வருகிறார்கள்.
இது தொடர்பாக அவர்களது உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் வந்த பின்னரே இறந்தவர்கள் பற்றிய முழு விவரம் தெரிய வரும்.