தமிழ்நாடு
கவர்னர் ஆர்என் ரவிக்கு பூரண கும்ப மரியாதை வழங்கப்பட்டபோது எடுத்த படம்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கவர்னர் ஆர்.என்.ரவி தரிசனம்

Published On 2021-12-14 04:03 GMT   |   Update On 2021-12-14 06:04 GMT
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்திற்கு செல்லும் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, ஓய்வு பெற்ற ராணுவ வீரர்கள் மற்றும் என்.சி.சி. அதிகாரிகள், மாணவர்களுடன் கலந்துரையாடுகிறார்.
திருச்செந்தூர்:

தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக நேற்று தூத்துக்குடி வந்தார்.

எட்டயபுரம், தூத்துக்குடியில் நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு இரவு திருச்செந்தூரில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் தங்கினார். இன்று காலை கவர்னர் ஆர்.என். ரவி, தனது மனைவி லட்சுமியுடன் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு சென்றார். கோவில் நிர்வாகம் சார்பில் அவருக்கு பூரண கும்ப மரியாதை அளித்து வரவேற்பு அளிக்கப்பட்டது.

தொடர்ந்து கோவிலில் மூலவர், சண்முகர், பெருமாள், சத்ரு சம்ஹார மூர்த்தி, தட்சிணாமூர்த்தி ஆகிய சன்னதிகளில் கவர்னர், தரிசனம் செய்தார். பின்னர் கோவில் அலுவலகத்தில் அவருக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.



நிகழ்ச்சியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார், ஏ.எஸ்.பி. ஹர்ஸ்சிங், ஆர்.டி.ஓ. கோகிலா, கோவில் இணை ஆணையர் (பொறுப்பு) குமரதுரை, தக்கார் பிரதிநிதி பாலசுப்பிரமணிய ஆதித்தன், உதவி ஆணையர் வெங்கடேஷ், கோவில் உள்துறை கண்காணிப்பாளர் ராஜ்மோகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

திருச்செந்தூர் கோவிலில் தரிசனத்தை முடித்துக்கொண்டு கவர்னர் ஆர்.என். ரவி, கார் மூலம் நெல்லை வந்தார். அவரை மாவட்ட நிர்வாகம் சார்பில் கலெக்டர் விஷ்ணு வரவேற்றார். பின்னர் மகேந்திரகிரி இஸ்ரோ மையத்திற்கு சென்று பணிகளை பார்வையிட்டார்.

பிற்பகலில் நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்திற்கு செல்லும் கவர்னர், ஓய்வு பெற்ற ராணுவ வீரர்கள் மற்றும் என்.சி.சி. அதிகாரிகள், மாணவர்களுடன் கலந்துரையாடுகிறார். அங்கு மாலையில் நடைபெறும் நிகழ்ச்சியில் பல்கலைக்கழக சின்டிகேட் உறுப்பினர்கள், பல்கலைக்கழக உறுப்பு கல்லூரி முதல்வர்கள், மாணவ-மாணவிகளுடன் கலந்துரையாடுகிறார்.

இன்றைய நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு வண்ணார்பேட்டை அரசு விருந்தினர் மாளிகையில் இரவு தங்குகிறார்.

நாளை (புதன்கிழமை) காலை நெல்லையப்பர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்யும் கவர்னர் பின்னர் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டு மாணவ-மாணவிகளுக்கு பட்டம் வழங்குகிறார்.



Tags:    

Similar News