தமிழ்நாடு
அமைச்சர் மா சுப்பிரமணியன்

கல்லூரி மாணவர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்: துணைவேந்தர்கள், முதல்வர்களுடன் அமைச்சர் ஆலோசனை

Published On 2021-12-10 05:49 GMT   |   Update On 2021-12-10 05:49 GMT
பெரும்பாலும் மாணவர்கள் உணவு இடைவேளையின்போது கூட்டமாக அமர்ந்து சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும் என கல்லூரிகளில் நடைமுறைப்படுத்த வேண்டிய கட்டுப்பாடுகள் பற்றி அமைச்சர் அறிவித்தார்.

சென்னை:

தமிழகத்தில் கொரோனா பரவல் மிகவும் குறைந்துள்ளது. தொடர்ந்து கட்டுப்படுத்தவும், கட்டுக்குள் வைத்திருக்கும் அரசு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.

இந்த நிலையில் அண்ணா பல்கலை கழக மாணவர்கள் 9 பேருக்கு, தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அனைத்து மாணவர்களுக்கும் பரிசோதனை நடத்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவிட்டார்.

இதையடுத்து 763 மாணவர்களுக்கும் பரிசோதனை செய்தனர். முதலில் 300 பேருக்கு நடத்தப்பட்ட சோதனையில் 9 பேருக்கு, தொற்று உறுதியானது. அவர்கள் அனைவரும் கிண்டி கிங் இன்ஸ்டிடியூட்டில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் எஞ்சிய 463 பேருக்கு சோதனை செய்யப்பட்டது. அவர்களில் யாருக்கும் தொற்று இல்லை என்பது அதிகாரபூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் உயர் கல்வித்துறை அதிகாரிகள், துணைவேந்தர்கள், கல்லூரி முதல்வர்கள் கூட்டம் ரிப்பன் மாளிகையில் இன்று நடந்தது. கூட்டத்தில் மாணவர்கள் மத்தியில் கொரோனா பரவுவதை கட்டுப்படுத்த மேற்கொள்ள வேண்டிய நடைமுறை கட்டுப்பாடுகள் பற்றி ஆலோசிக்கப்பட்டது.

இந்த கூட்டத்தில் கல்லூரிகளில் நடைமுறைப்படுத்த வேண்டிய கட்டுப்பாடுகள் பற்றி அறிவித்துள்ளனர். அதன் விவரம் வருமாறு:-

*மாணவர்கள் வகுப்பறைகளில் கட்டாயம் முககவசம் அணிந்துதான் இருக்க வேண்டும்.

*வகுப்பறைகளின் வாயிலில் கிருமி நாசினி வைத்திருக்க வேண்டும்.


*சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யவேண்டும்.

*பெரும்பாலும் மாணவர்கள் உணவு இடைவேளையின்போது கூட்டமாக அமர்ந்து சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். அதற்கு ஏற்ற வகையில் இடைவேளை நேரங்களை மாற்றி அமைக்கலாம்.

*கல்லூரி முடியும் நேரத்திலும் கூட்டமாக செல்வதை தவிர்க்க இடைவெளி விட்டு வகுப்புகளை விடவேண்டும்.

இதுவரை வெளிநாடுகளில் இருந்து வந்த 10 ஆயிரத்து 762 பேர் பரிசோதிக்கப்பட்டனர். அவர்களில் 17 பேருக்கு கொரோனா தொற்று இருந்தது.

அவர்களது மாதிரிகள் ஒமைக்ரான் தொற்று இருக்கிறதா என்பதை கண்டுபிடிப்பதற்காக பெங்களூருக்கு அனுப்பப்பட்டது. இதுவரை 13 பேரின் சோதனை முடிவுகள் வந்துள்ளன. அனைவருக்கும் டெல்டா வகை கொரோனாவே உறுதியாகி உள்ளது.

எஞ்சிய பேருக்கும் முதற்கட்ட ஆய்வில் ஒமைக்ரான் இல்லை என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை யாருக்கும் இதுவரை ஒமைக்ரான் தொற்று எற்படவில்லை.

இவ்வாறு அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.

இதையும் படியுங்கள்...தற்காலிக ஆய்வக உதவியாளர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்- ஓ.பன்னீர்செல்வம்

Tags:    

Similar News