வெள்ளநீரை உடனடியாக வெளியேற்றக்கோரி தூத்துக்குடியில் பொதுமக்கள் திடீர் சாலை மறியல்
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் வெள்ளநீர் சூழ்ந்தது. மாநகராட்சி சார்பில் மின்மோட்டார், டேங்கர் லாரிகள் மூலம் தண்ணீர் அகற்றப்பட்டாலும் சில குடியிருப்புகளை சூழ்ந்த தண்ணீர் வடியாமல் உள்ளது.
குறிப்பாக மாநகர பகுதியில் சில இடங்களில் 10 நாட்களாகியும் தண்ணீர் வடியவில்லை. இந்நிலையில் தூத்துக்குடி- ராமேஸ்வரம் பிரதான சாலையில் 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் இன்று காலை திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் கூறும் போது, மாப்பிள்ளையூரணி பஞ்சாயத்திற்குட்பட்ட அ.சண்முக புரம், பூபாண்டியாபுரம், கோட்டையன்தோப்பு, ஆரோக்கியபுரம் உள்ளிட்ட பல கிராமங்களில் மழைநீர் இன்னும் வடியாமல் உள்ளது.
இதனால் எங்கள் இயல்பு வாழ்க்கை முழுவதும் முடங்கி உள்ளது. எனவே போர்க்கால அடிப்படையில் அதனை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். இதையறிந்த தாளமுத்துநகர் போலீசார் மற்றும் மாப்பிள்ளையூரணி பஞ்சாயத்து தலைவர் சரவணக்குமார் ஆகியோர் மறியலில் ஈடுபட்ட பொது மக்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர்.