தமிழ்நாடு
மேலப்பாளையத்தில் கடைகள் அடைக்கப்பட்டுள்ள காட்சி

பாபர் மசூதி இடிப்பு தினம்- மேலப்பாளையத்தில் கடைகள் அடைப்பு

Published On 2021-12-06 04:58 GMT   |   Update On 2021-12-06 04:58 GMT
பாபர் மசூதி இடிப்பை கண்டித்து எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பாக இன்று காலை மேலப்பாளையம் சந்தை ரவுண்டானா அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
நெல்லை:

பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி இன்று நாடு முழுவதும் முக்கிய பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

நெல்லை மேலப்பாளையத்தில் தொடர்ந்து கடைகளை அடைத்து பல்வேறு கட்சிகள் சார்பாக போராட்டம் நடைபெறும். அதுபோல இந்த ஆண்டும் மேலப்பாளையத்தில் உள்ள அனைத்து கடைகள், மொத்த விற்பனை நிறுவனங்கள், டீக்கடைகள், பெட்டிக் கடைகள் ஆகிய அனைத்தும் இன்று அடைக்கப்பட்டன.

இதனால் முக்கிய வீதிகளான அண்ணா வீதி, பஜார் திடல், சந்தை ரவுண்டானா பகுதிகள் வெறிச்சோடி காணப்பட்டது.

மேலப்பாளையம் பகுதியில் இன்று கார்-ஆட்டோக்கள் ஓடவில்லை. வேன்கள், மினி லாரிகளும் இயக்கப்படவில்லை. பெரும்பாலான ஆட்டோ நிறுத்தங்கள் ஆட்டோக்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.

இதனால் முக்கிய சாலைகளிலும் போக்குவரத்து குறைந்து வெறிச்சோடி காணப்பட்டன.

மேலப்பாளையம் பகுதிகள் முழுவதுமே பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்திலும் இன்று வழக்கத்தை விட கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டு இருந்து. பஸ் நிலையங்கள் மற்றும் மக்கள் கூடும் இடங்களிலும் கூடுதலாக போலீசார் நிறுத்தப்பட்டு கண்காணித்து வந்தனர்.

பாபர் மசூதி இடிப்பை கண்டித்து எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பாக இன்று காலை மேலப்பாளையம் சந்தை ரவுண்டானா அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் சாகுல் உஸ்மானி தலைமை தாங்கினார். மாநில பொதுச் செயலாளர் உமர்பாரூக் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். இதில் ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டார்கள்.

த.மு.மு.க. சார்பாக இன்று மாலை மேலப்பாளையம் ரவுண்டானா அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடக்கிறது.




Tags:    

Similar News