தமிழ்நாடு
பூண்டி ஏரி

சென்னை குடிநீர் ஏரிகளில் தண்ணீர் திறப்பு குறைப்பு

Published On 2021-12-05 08:10 GMT   |   Update On 2021-12-05 08:10 GMT
பூண்டி ஏரியில் தற்போது 2,893 மி.கனஅடி தண்ணீர் உள்ளது. ஏரிக்கு 3,504 கனஅடி நீர் வந்து கொண்டு இருக்கிறது.
திருவள்ளூர்:

சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளாக செம்பரம்பாக்கம், சோழவரம், புழல், பூண்டி, கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை ஏரிகள் உள்ளன.

இந்த 5 ஏரிகளிலும் 11 ஆயிரத்து 757 மி.கனஅடி தண்ணீர் சேமித்து வைக்கலாம். தற்போது ஏரிகளில் 10 ஆயிரத்து 155 மி.கனஅடி தண்ணீர் உள்ளது.

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததை அடுத்து கடந்த 2 வாரமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை கொட்டித்தீர்த்து. இதனால் குடிநீர் ஏரிகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து நீர்மட்டம் முழுக்கொள்ளளவை நெருங்கியது.

இதையடுத்து அனைத்து ஏரிகளிலும் இருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டது. பூண்டி ஏரியில் அதிக பட்சமாக 38 ஆயிரம் கனஅடி வரை தண்ணீர் திறக்கப்பட்டது.

இந்த நிலையில் தற்போது மழை இல்லாததால் ஏரிகளுக்கு நீர் வரத்து குறைந்துள்ளது. இதையடுத்து குடிநீர் ஏரிகளில் இருந்து உபரி நீர் திறப்பு குறைக்கப்பட்டுள்ளது.

பூண்டி ஏரியின் மொத்த கொள்ளளவு 3,231 மி.கனஅடி. தற்போது ஏரியில் 2,893 மி.கனஅடி தண்ணீர் உள்ளது. ஏரிக்கு 3,504 கனஅடி நீர் வந்து கொண்டு இருக்கிறது. ஏரியில் இருந்து 2,605 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. நேற்று முன்தினம் 10 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது

செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த கொள்ளளவு 3 ஆயிரத்து 645 மி.கனஅடி, ஏரியில் 3,151 மி.கனஅடி தண்ணீர் உள்ளது. ஏரிக்கு 550 கனஅடி நீர் வந்து கொண்டு இருக்கிறது. 266 கனஅடி வெளியேற்றப்படுகிறது.

சோழவரம் ஏரியில் 255 மி.கனஅடி தண்ணீர் (மொத்த கொள்ளளவு 1,084 மி.கனஅடி) உள்ளது. ஏரிக்கு 866 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. 415 கனஅடி வெளியேற்றப்படுகிறது.

புழல் ஏரியில் 2,092 மி.கனஅடி தண்ணீர் உள்ளது (மொத்த கொள்ளளவு 3,300 மி.கனஅடி). ஏரிக்கு 400 கனஅடி தண்ணீர் வருகிறது. 295 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.

கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை ஏரி முழுக்கொள்ளளவான 500 மி.கனஅடி நிரம்பி உள்ளது. ஏரிக்கு வரும் 149 கனஅடி நீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது.

Tags:    

Similar News