எடப்பாடி போலீஸ் நிலைய வாசலில் குத்தாட்டம் போட்ட பெண்ணால் பரபரப்பு
எடப்பாடி:
ஜலகண்டாபுரம் பிரதான சாலையில் எடப்பாடி போலீஸ் நிலையம் அமைந்துள்ளது. இங்கு நேற்று சுமார் 35 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர் வந்தார். அப்போது அங்கு ஏற்கனவே புகார் அளிக்க வந்தவர்களுடன் அவர் சற்று நேரம் அமைதியாக நின்றிருந்தார்.புகார் அளிக்க வந்தவர்களிடம் விசாரணை செய்த போலீசார், அந்த பெண்ணை கண்டு கொள்ளாமல் இருந்தனர்.
இதனால் பொறுமை இழந்த அந்த பெண் திடீரென யாரும் எதிர்பாராத நிலையில் போலீஸ் நிலைய வாசலில் குத்தாட்டம் போட்டு நடனம் ஆட தொடங்கினார். இதனால் போலீசார் மற்றும் அங்கு புகார் அளிக்க வந்திருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
ஒரு சிலர் அந்த பெண்ணிடம் சென்று, இது போலீஸ் நிலையம், இங்கு நடனம் ஆட கூடாது என அறிவுறுத்தினர்.
அப்போது "ஆட்டம் புடிச்ச ஒரு ஓரமா நின்னு பாரு இல்லையென்றால் போய்க்கொண்டே இரு" என அவர்களிடம் தெரிவித்தார். தொடர்ந்து 2 மணி நேரத்திற்கு மேலாக திரைப்படத்தில் வரும் பல்வேறு பாடல்களைப் பாடியபடி, குத்தாட்டம் போட்டார்.
அந்த பெண்னை அங்கிருந்த போலீசார் யாரும் ஏன் என்று கேட்காத நிலையில் ஆடிக்களைத்த பின் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.
இது குறித்து போலீஸ் நிலையத்தில் இருந்த போலீசாரிடம் கேட்டபோது, அந்தப் பெண் எடப்பாடி நகராட்சி உட்பட்ட கவுண்டம்பட்டி பகுதியை சேர்ந்தவர் என்றும், அடிக்கடி பிரச்சனை என கூறி போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்க வருவதாகவும், அவரது பொய்யான புகாரை ஏற்காத பட்சத்தில் இவ்வாறு குத்தாட்டம் போட்டு போலீஸ் நிலைய வாசலில் பரபரப்பு ஏற்படுத்துவதாகவும் கூறினர்.