செய்திகள்
எடப்பாடி பழனிசாமி

அம்மா மினி கிளினிக்குகளை மூடும் முடிவை கைவிட வேண்டும்- எடப்பாடி பழனிசாமி கோரிக்கை

Published On 2021-11-30 09:48 GMT   |   Update On 2021-11-30 09:48 GMT
அம்மா மினி கிளினிக்குகளில் பணிபுரியும் அனைத்து மருத்துவர்களையும், மருத்துவ பணியாளர்களையும் தொடர்ந்து பணிபுரிய அனுமதிக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
சென்னை:

அ.தி.மு.க. எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

தமிழகம் எங்கும் கிராம புறங்களில் வாழும் ஏழை, எளிய, ஒடுக்கப்பட்ட, நசுக்கப்பட்ட மக்கள், தங்களது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பி படிக்க வைக்க வேண்டும். இதனால் அவர்கள் ஒருவேளை உணவையாவது வயிறார உண்ண வேண்டும் என்ற உன்னத நோக்கத்தில் தங்களது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பும்படி மாணவ செல்வங்கள் பசியால் பாதியில் தங்கள் படிப்பை நிறுத்திவிடக்கூடாது என்று அனைத்து மாணவர்களுக்கும் உணவளித்து, கடையேழு வள்ளல்களை தொடர்ந்து இந்த உலகில் 8-ம் வள்ளலாக திகழ்ந்தார் எம்.ஜி.ஆர்.

சத்துணவு திட்டத்தை கேலி பேசிய அப்போதைய தி.மு.க. தலைவர் 1989-ம் ஆண்டு முதல்-அமைச்சர் ஆனவுடன் தொடர்ந்து இந்த திட்டத்தை செயல்படுத்தினார். அதுபோலவே எம்.ஜி.ஆர், அம்மா ஆகியோர் தமிழக மக்களுக்கு செயல்படுத்திய பல மக்கள் நல திட்டங்களை மாணவ-மாணவியருக்கு விலையில்லா சைக்கிள், தாலிக்கு தங்கம், இலவச சீருடை, விலையில்லா மின்சாரம், தொட்டில் குழந்தை திட்டம் போன்ற பல திட்டங்களை மறைந்த தி.மு.க. தலைவர் முதல்வரான பின்னரும் தொடர்ந்து செயல்படுத்தினார்.

ஆனால் இந்த தி.மு.க. அரசு பதவி ஏற்றதில் இருந்து அம்மாவின் அரசு செயல்படுத்திய பல மக்கள் நல திட்டங்களுக்கு மூடுவிழா நடத்தி வருகிறது.

* அம்மா உணவகம் (மளிகை பொருட்களை குறைவாக வழங்குதல், பணியாளர்களை குறைத்தல், ஊதியத்தை குறைத்தல், ஒரு சில இடங்களில் அம்மா உணவகத்தின் பெயர் பலகைகளை மாற்றி வைத்தல்.)

* தாலிக்கு தங்கம் (புதிய விதிமுறைகளை புகுத்துதல்)

* அம்மா இருசக்கர வாகன திட்டத்தை கைவிடுதல்.

அம்மா மினி கிளினிக்கை மூடும் விதமாக அங்கு பணிபுரியும் சுமார் 1820 மருத்துவர்களையும் மற்றும் 1420 மருத்துவப் பணியாளர்களையும் எதிர்வரும் 4.12.2021 முதல் பணி நீக்கம் செய்யப்பட உள்ளதாக ஒரு செய்தி சமூக வலைதளங்களில் வந்துள்ளது.

இந்த அரசு பொறுப்பேற்ற நேரத்தில் தமிழ்நாட்டில் கொரோனா நோய்த்தொற்று மிக அதிகமாக பரவி இருந்தது. அதனை கட்டுப்படுத்த அரசு, அம்மா மினி கிளினிக் மருத்துவர்களை முழுவதுமாக பயன்படுத்திக் கொண்டது. கொரோனா நோய்த்தொற்று அதிகமுள்ள காலத்திலும் தங்களது உடல் நிலையினை கருத்தில் கொள்ளாமல், உண்மையான மருத்துவர்கள் என்ற முனைப்போடு பணியாற்றி கொரோனா நோய்த்தொற்றை இன்று 3 இலக்க எண்ணிக்கையில் கட்டுக்குள் கொண்டுவந்த அம்மா மினி கிளினிக் மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களை இந்த தி.மு.க. அரசு வரும் டிசம்பர் 4-ந்தேதி முதல் பணிநீக்கம் செய்ய உள்ளது என்ற சமூக வலைதள செய்தி என்னை மிகவும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. மேலும் இந்த பணிநீக்க செய்தி அம்மா மினி கிளினிக்கில் பணிபுரியும் மருத்துவர்களின் தன்னலமற்ற சேவையினையும், மன உறுதியினையும் தகர்க்கும் வண்ணம் உள்ளது.

அம்மா மினி கிளினிக்குகளை மூடும் முயற்சியினை கைவிட்டு விட்டு அம்மா மினி கிளினிக்குகளில் பணிபுரியும் அனைத்து மருத்துவர்களையும், மருத்துவ பணியாளர்களையும் தொடர்ந்து பணிபுரிய அனுமதிக்க வேண்டும் என்றும், மக்களின் உடல்நலத்தோடும், அவர்களின் வாழ்க்கையோடும், உயிரோடும் விளையாடுவதை உடனே கைவிட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
Tags:    

Similar News