செய்திகள்
முல்லைப்பெரியாறு அணை

உபரி நீர் நிறுத்தப்பட்டதால் 142 அடியை எட்டும் முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம்

Published On 2021-11-29 05:22 GMT   |   Update On 2021-11-29 05:22 GMT
முல்லைப்பெரியாறு அணையில் இருந்து கேரளாவுக்கு திறக்கப்பட்ட உபரிநீர் நிறுத்தப்பட்டதால் அணையின் நீர் மட்டம் இன்றோ அல்லது நாளையோ 142 அடியை எட்டும் நிலையில் உள்ளது.
கூடலூர்:

முல்லைப்பெரியாறு அணையின் நீர் பிடிப்பு பகுதியில் கடந்த 1 மாதமாக கன மழை பெய்து வருகிறது. கடந்த 20 நாட்களுக்கு முன்பே 142 அடியை எட்டும் என்று விவசாயிகள் எதிர்பார்த்தனர். ஆனால் உச்சநீதிமன்றத்தில் தமிழக, கேரள அரசுகள் ஒத்துக்கொண்ட ‘ரூல் கர்வ்’ நடைமுறைப்படி நவம்பர் 20-ந் தேதி முதல் 141 அடிக்கு மேலும் 30-ந் தேதி 142 அடி வரை தேக்கிக் கொள்ள அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது.

அதன்படி கடந்த 10 நாட்களாக 141 அடிக்கு மேல் தண்ணீர் நிலை நிறுத்தப்பட்டு 142 அடியை எட்டாத வகையில் தொடர்ந்து கேரள பகுதிக்கு உபரிநீர் வெளியேற்றப்பட்டது.

இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 141.90 அடியாக உள்ளது. அணைக்கு 2232 கன அடி நீர் வருகிறது. அணையில் இருந்து 1867 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. மழை சற்று குறைந்திருந்த போதிலும் நீர்வரத்து அதிகரித்திருப்பதால் இன்று மாலை அல்லது நாளை அணையின் நீர் மட்டம் 142 அடியை எட்டும் என விவசாயிகள் நம்பிக்கையடைந்துள்ளனர். நீர் இருப்பு 7639 மி.கன அடியாக உள்ளது.

உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு பிறகு பெரியாறு அணையின் நீர்மட்டம் 4-வது முறையாக தற்போது 142 அடியை நெருங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதே போல தேனி மாவட்டத்திலும் வைகை அணையின் நீர்பிடிப்பு பகுதிகளிலும் பெய்த கனமழை காரணமாக அணையின் நீர் மட்டம் கடந்த 9-ந் தேதி முழு கொள்ளளவை எட்டியது. இதனால் தேனி, திண்டுக்கல், மதுரை உள்பட 5 மாவட்ட பாசனத்துக்காக கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டது. மேலும் 58-ம் கால்வாய் பாசனத்துக்கும் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

71 அடி உயரமுள்ள அணையின் நீர் மட்டம் தற்போது 69.72 அடியாக உள்ளது. நீர் வரத்து 1805 கன அடி. திறப்பு 1772 கன அடி. நீர் இருப்பு 5758 மி.கன அடி.

பெரியாறு 4.4, தேக்கடி 2, கூடலூர் 5.3, வீரபாண்டி 2, வைகை அணை 1, கொடைக்கானல் 23 மி.மீ மழை அளவு பதிவாகியுள்ளது.

Tags:    

Similar News