செய்திகள்
இறந்தவருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தியதாக குறுஞ்செய்தி - குடும்பத்தினர் அதிர்ச்சி
காஞ்சீபுரத்தில் உயிரிழந்தவருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தியதாக குறுஞ்செய்தி வந்ததையடுத்து குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.
காஞ்சீபுரம்:
காஞ்சீபுரம் பெரு நகராட்சிக்குட்பட்ட அஸ்தகிரி தெருவை சேர்ந்தவர் ரகு (வயது 70). உடல்நிலை பாதிக்கப்பட்ட இவர் கடந்த மாதம் 8-ந் தேதி உடல்நல குறைவால் உயிரிழந்தார்.
இந்த நிலையில் நேற்று காஞ்சீபுரம் மாவட்டத்தில் நடந்த மெகா தடுப்பூசி முகாமில் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டதாக அவர் பயன்படுத்தி வந்த செல்போனுக்கு குறுஞ்செய்தி வந்தது.
இதனால் அதிர்ச்சியடைந்த அவரது குடும்பத்தினர் கொரோனா தடுப்பூசி சான்றிதழை டவுன்லோட் செய்து பார்த்தபோது, ரகு நேற்று சின்ன காஞ்சீபுரம் நகர்ப்புற சுகாதார நிலையத்தில் 2-வது தவணை தடுப்பூசி செலுத்தி கொண்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
அனைவருக்கும் தடுப்பூசி செலுத்திவிட வேண்டும் என தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வரும் நிலையில் சுகாதார துறை ஊழியர்களின் அலட்சியத்தால் உயிரிழந்தவருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக வந்த தகவல் காஞ்சீபுரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ரகு கடந்த ஏப்ரல் மாதம் முதல் தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.